கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்கு சமம்.. சூர்யாவுக்கு ஆதரவாக 25 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம்
சென்னை: நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என கோரி 25 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கொரோனா உச்சத்தில் இருந்து வரும் நிலையில் மற்ற தேர்வுகளை போல நீட் தேர்வையும் தள்ளுபடி செய்ய வேண்டும், குறைந்தபட்சம் ஒத்தியாவது வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
எனினும் நேற்றைய தினம் இந்த தேர்வு நடைபெற்றது. அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். இது சூர்யாவின் மனதை கடுமையாக பாதித்தது.

நீட் தேர்வு நடத்தப்பட்டதை கண்டித்து சூர்யா தனது ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத என உத்தரவிடுகிறது என சூர்யா நீதிமன்றம் குறித்து தெரிவித்திருந்தார்.
இது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றது எனக் கூறிய நீதிபதி சுப்பிரமணியன், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவதற்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட தேவையில்லை என்றும் அவர் உள்நோக்கத்துடன் நீதிமன்றத்தை சாடவில்லை என்றும் இதை அப்படியே பெருந்தன்மையாக விட்டு விடலாம் என்றும் 6 முன்னாள் நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.

இதையடுத்து சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரி 25 மூத்த வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி சாஹுவிடம் கொடுத்துள்ளனர். சூர்யாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்கு சமம் என 25 மூத்த வழக்கறிஞர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications