பாரதிராஜாவையே "சாய்த்த" ஐஸ்வர்யா.. இவரும் ஒரு பெண்ணா?.. ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. மிரண்ட போலீஸ்
ஃபேஸ்புக்கில் பழகி பணம் பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்
சென்னை: 26 வயது பெண் ஐஸ்வர்யா, பாரதிராஜா என்ற இளைஞரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.. இத்தனைக்கும் பாரதிராஜா ஒரு போலீஸ்காரர்..!
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா.. 25 வயதாகிறது.. திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக உள்ளார்.
இந்த 3 மாதமாக, சென்னை, திருவொற்றியூரில் உள்ள கடற்படையில் பணியாற்றி வருகிறார்.. பாரதிராஜாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யா என்ற இளம்பெண் ஃபேஸ்புக்கில் பழக்கமானார்..
போவியா.. ஃபேஸ்புக் பக்கம் போவியா.. கன்னத்தில் பளார்னு அறைய.. வேலைக்கு ஆள் வைத்த பிசினஸ்மேன்
திருமணம்
ஆவடியை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கு 26 வயதாகிறது.. டாக்டருக்கு படித்து வருவதாக பாரதிராஜாவிடம் சொல்லி உள்ளார்.. ஒருகட்டத்தில், தன்னை செய்து கொள்கிறீர்களா என்றும் பாரதிராஜாவை கேட்டுள்ளார்.. டாக்டர் பெண் இப்படி கேட்கவும், அதற்கு சரி என்று சம்மதித்துள்ளார்.. பிறகு ஐஸ்வர்யா, கல்யாண பேச்சை அடிக்கடி எடுத்தார்.. கல்யாணத்திற்கு பூஜை செய்ய வேண்டும், கல்யாணத்திற்கு நகைகள் வாங்க வேண்டும் என்று சொல்லி பணம் தவணையாக கேட்டுள்ளார்..
டிரான்ஸ்பர்
பாரதிராஜாவும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு முதல் தவணையாக 4 லட்சம் தந்துள்ளார்.. பாரதிராஜா அந்த பணத்தை ஐஸ்வர்யாவின் தந்தை பழனியின் வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார்.. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக 14 லட்சம் வரை பாரதிராஜாவிடம் பணம் வாங்கி விட்டார் ஐஸ்வர்யா. இதற்கிடையில், ஐஸ்வர்யா, அவருடைய தங்கையை பாரதிராஜாவிடம் ஃபேஸ்புக்கில் அறிமுகப்படுத்தி உள்ளார்.. பாரதிராஜாவோ, தன்னுடைய தம்பி அதாவது பெரியப்பா மகன் மகேந்திரனை, ஐஸ்வர்யாவின் தங்கைக்கு முகநூலில் அறிமுகம் செய்து வைத்துள்ளர்.. ஐஸ்வர்யாவின் தங்கையும், மகேந்திரனும் ஃபேஸ்புக்கிலேயே நட்பானார்கள்..
சம்மதம்
ஒருகட்டத்தில் மகேந்திரனை திருமணம் செய்ய, ஐஸ்வர்யாவின் தங்கை ஆசைப்பட்டுள்ளார்.. மகேந்திரனும் அதற்கு சம்மதம் சொல்லவே, ஐஸ்வர்யா போலவே கல்யாணத்துக்கு நகை வாங்க பணம் கேட்டுள்ளார் அவர் தங்கை.. எனவே, மகேந்திரனும், கடந்த 6 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக 20 லட்சம் வரை வங்கி கணக்கில் ஐஸ்வர்யா தங்கைக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார்... இதைதவிர, ஒரு சவரன் தங்க சங்கிலி, ஒரு ஜோடி கொலுசு வாங்கி கொரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
அதிர்ச்சி
ஆனால், கடந்த ஒரு மாதமாகவே ஐஸ்வர்யாவிடம் இருந்து எந்த தகவலும் பாரதிராஜாவுக்கு வரவில்லை.. அதேபோல ஐஸ்வர்யாவின் தங்கையிடம் இருந்தும் மகேந்திரனுக்கு எந்த தகவலும் வரவில்லை.. இதற்கு பிறகுதான் அந்த அதிர்ச்சி விஷயம் வெளியேவந்தது.. பாரதிராஜா இதுவரை ஐஸ்வர்யாவை நேரில் ஒருமுறைகூட பார்த்ததே இல்லையாம்.. இவ்வளவு நாளும் போனில்தான் பேசி கொண்டு வந்தார்களாம்.. இதுதான் நம்பர் ஒன் ஷாக்.
நம்பர் ஒன் ஷாக்
மகேந்திரனிடம் இதுவரை பேசியது ஐஸ்வர்யாவின் தங்கை இல்லை.. அது ஐஸ்வர்யாவேதான்.. மகேந்திரனிடம், பாரதிராஜாவிடமும் ஒரே நேரத்தில் ஃபேஸ்புக்கில் சேட்டிங் செய்து வந்ததுடன், இருவரிடமும் போனில் குரலை மாற்றி மாற்றி பேசி வந்துள்ளார்.. இதுதான் நம்பர் 2 ஷாக்..!
பாரதிராஜா
ஒருத்தர் 14 லட்சம் தந்து ஏமாந்துள்ளார்.. இன்னொருத்தர் 20 லட்சம் தந்து ஏமாந்துள்ளார்.. அண்ணன் - தம்பி சேர்ந்து இப்படி ஒரு பெண்ணிடம் ஏமாந்து போய்விட்டோமே என்று அதிர்ந்து போனார்கள்.. இதற்கு பிறகுதான், பாரதிராஜா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்... கமிஷனர் சங்கர் ஜீவால் புகாரை ஆவடி ஸ்டேஷனுக்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார்... இதனையடுத்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஐஸ்வர்யாவையும், அவரது பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.
மகேந்திரன்
அப்போதுதான் பாரதிராஜா, மகேந்திரனுக்கு அடுத்தடுத்த ஷாக்குகள் காத்திருந்தன.. ஐஸ்வர்யா டாக்டருக்கு படிக்கவேயில்லையாம்.. +2வரைதான் படித்துள்ளாராம்.. தனது அக்கா வைத்திருக்கும் ஃபேன்ஸி ஸ்டோரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதைவிட இன்னொரு ஹைலைட் உள்ளது, ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாம்.. கணவர் பெயர் சரண்குமார்... ஆந்திர மாநிலம் நகரியில் வேளாண்மை துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்... 8 வயதில் ஒரு மகள் உள்ளார்... இன்னொரு கொசுறு தகவலும் உண்டு: ஐஸ்வர்யா இப்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறாராம்.
அதிர்ச்சி
இவ்வளவும் செய்த அந்த ஐஸ்வர்யாவை, போலீஸ் விசாரணையின்போதுதான், பாரதிராஜாவும், மகேந்திரனும் நேரில் பார்த்தனர்.. அதுவரை ஃபேஸ்புக்கில் வைத்திருந்த புரொபைல் போட்டோவும் ஐஸ்வர்யாவின் போட்டோ இல்லை என்பதை தெரிந்து அதற்கு மேல் நொந்துபோனார்கள்.. யாரோ ஒரு அழகான இளம்பெண்ணின் போட்டோவை வைத்து, ஐஸ்வர்யா ஏமாற்றி வந்துள்ளார்.
விசாரணை
அண்ணன் - தம்பி இருவரிடமும் வாங்கி மோசடி செய்த பணத்தை கொண்டு, இத்தனை நாள் ஆடம்பரமாக செலவு செய்து வந்ததாகவும் போலீசில் வாக்குமூலம் தந்துஉள்ளார் ஐஸ்வர்யா.. இப்போது ஐஸ்வர்யா கைதாகி உள்ளார்.. ஃபேஸ்புக்கில் இன்னும் எத்தனை பேரை இவர் ஏமாற்றி இருக்கிறார், எவ்வளவு பணம் கறந்திருக்கிறார் என்பது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.. ஆக மொத்தம் வெறும் கவர்ச்சி பேச்சை மட்டுமே வைத்து, 34 லட்சம் ரூபாயை கொடுத்து, அண்ணன் - தம்பிகள் இருவரும் ஏமாந்துள்ளனர்..!