அடேங்கப்பா..! புத்தாண்டு, லாக்டவுனுக்கு டஃப் கொடுத்த மே1.! 252 கோடிகளை கொட்டி கொடுத்த குடிகாரர்கள்!
சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்று தொழிலாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு மற்றும் முழு ஊரடங்கு விற்பனையை விட நேற்று தமிழகத்தில் சுமார் 252 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.
மே 1 தொழிலாளர் தினமான இன்று உலகெங்கும் உள்ள தொழிலாளர் தோழர்கள் வழக்கமான உற்சாகத்துடன் தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது
இதனால் தமிழகத்தில் உள்ள மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல அதனுடன் இணைந்து செயல்படும் பார்களும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக நேற்று டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.
டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்த தமிழக அரசு..!
புத்தாண்டில் சரிந்த டாஸ்மாக்
வழக்கமாக புத்தாண்டு தினத்தில் மது விற்பனை களைகட்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வழக்கத்தை விட அதிக அளவில் மது விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு நிறைவடைந்து 2022ஆம் ஆண்டு பிறந்த நிலையில் மது விற்பனை வரலாற்றுச் சாதனை படைக்கும் என கருதப்பட்ட நிலையில் 147.69 கோடி ரூபாய்க்கு மட்டுமே மது விற்பனை நடைபெற்றது.
டாஸ்மாக் அதிர்ச்சி
இது கடந்த ஆண்டு விற்பனையான அளவை விட குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டு மட்டும் 153 கோடி ரூபாய் மது விற்பனை நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு விற்பனை குறைந்ததால் டாஸ்மாக் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் புத்தாண்டு விற்பனை சரிவை ஈடுகட்டும் வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் ஞாயிரன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் 217.97 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
மே 1 விற்பனை
இந்நிலையில் அதையும் மிஞ்சும் சாதனையாக நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 252.34 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. டாஸ்மாக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அளித்துள்ள தகவலின்படி தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் இந்த விற்பனை நடைபெற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மதுபானங்களுக்காக அலைய கூடாது என்பதற்காக முன்னரே மதுபானங்களை குவித்து வைத்துள்ளனர் குடிகாரர்கள். மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள்ளாகவே இந்த விற்பனை சாதனையை எட்ட வைத்துள்ளனர்.
சென்னை முதலிடம்
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ள தகவலின் படி நேற்று மட்டும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் 252.34 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 55.89 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அடுத்ததாக சென்னை மண்டலத்தில் 52.28 கோடி ரூபாய் அளவுக்கும், திருச்சி மண்டலத்தில் 49.78 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது. இதற்கு அடுத்த படியாக சேலம் மண்டலத்தில் 48.67 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 46.72 கோடி ரூபாய்க்கும் மதுபானங்களை அள்ளிக் குவித்துள்ளனர்.