பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3.33 லட்சம் வீடுகள்! அமைச்சர் பெரியகருப்பன் நடத்திய ஆய்வு
சென்னை: பிரதம மந்திரி கிராம குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 5.27 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 3.33 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆய்வுக்கூட்டத்தின் போது இது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் விரிவான ஆலோசனை நடைபெற்றிருக்கிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் திட்டப்பணிகளை விரைவுபடுத்தி முடித்து திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடைய செய்ய வேண்டும் என அதிகாரிகளை அமைச்சர் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டார்.

ஆய்வுக் கூட்டம்
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆய்வுக்கூட்டம் சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சி இயக்குனரகத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச்செயலர் அமுதா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் திட்டப்பணிகளை விரைவுபடுத்தி திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

பிரதம மந்திரி திட்டம்
கடந்த 2016-17 முதல் 2019-20 வரை பிரதம மந்திரி கிராம குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 5.27 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 3.33 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது குறித்தும் ஒன்றிய அரசிடமிருந்து 929 கோடி ரூபாயும் மாநில அரசிடமிருந்து 619 கோடி ரூபாயும் இந்நிதியாண்டில் மட்டும் பெறப்பட்டது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டில் 2.90 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 2.32 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.

சமத்துவபுரம்
ஏற்கனவே கட்டப்பட்ட 238 சமத்துவபுரங்களில் முதல் கட்டமாக 149 சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்காக ரூபாய் 190 கோடி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதன் பணி விவரங்களை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கேட்டறிந்தார்.

ஊரக வேலை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் 33.90 கோடி வேலை நாட்கள் எய்தப்பட்டு, மொத்தம் 9000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது, ஊரகப் பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது, இத்திட்டத்தின்கீழ் 41.57 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு இதுவரை 30.30 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருப்பது பற்றியும் விரிவாக பேசப்பட்டது.

ஒத்துழைப்பு தேவை
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் 2020-21 ஆம் ஆண்டில் 1913 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.1054 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. தற்போது நடைபெறும் திட்டங்கள் மற்றும் இத்துறை மூலம் இனி வருங்காலங்களில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் அனைத்தையும் விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்திட அனைத்து அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications