கத்தரி வெயில் நெருங்குகிறது.. அனல், பசி மயக்கத்திற்கு 3 பேர் சுருண்டு பலி.. கிலியை தரும் "சூரியன்"
தமிழகத்தில் வெயில் காரணமாக பீர் விலை உயர்ந்து காணப்படுகிறது
சென்னை: நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 3 பேர் சுருண்டு விழுந்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது.. அதிலும் வழக்கம்போல் வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே வெயில் சதம் அடித்து வருகிறது..
ஒருசில நாட்களில் சதத்தைவிட தொடவில்லை என்றாலும்கூட, வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.. பகல் நேரத்தில் வெளியில் தலைகாட்டவே முடியாத அளவுக்கு வெப்ப காற்று வீசுகிறது.

அனல்காற்று
வெப்பத்தின் அளவு அதிகரிப்பதாலேயே இத்தகைய அனல்காற்று வீசியது... சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் கானல் நீர் தெரிந்தது... வெயிலுக்கு பயந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.. வெளியில் வரும் பொதுமக்களும், குடைபிடித்தபடி பாதுகாப்பாக சென்று வருகிறார்கள்... 2 நாட்களுக்கு முன்பு, வேலூரில் 103.1 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.

வாட்டும் வெயில்
நேற்று முன்தினம், அதிகபட்சமாக 103.3 டிகிரி வெயில் சுட்டெரித்தது... அதேபோல், கரூர், திருச்சியிலும் வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.. திருச்சி, கரூரிலும், திருவண்ணாமலையிலும் 100 டிகிரி வெயில் கொளுத்தியது... மதுரையிலும் வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளது... சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 2 நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது...

ஆண் சடலம்
இதனிடையே, செங்கல்பட்டில் வெயில் கொடுமைக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. வில்லியம்பாக்கம், பாலாறு பகுதியில், ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் வரவும் அவர்கள் விரைந்து சென்றனர்.. இறந்தவர் பெயர் விஜயகுமார், 40 வயதாகிறது, அவர் சாத்தனாஞ்சேரியை சேர்ந்த பெயின்டர் என்பது தெரிந்தது... அதேபோல், வேண்பாக்கம் கிராமத்தில், 70வயது முதியவர் இறந்துவிட்டார். செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் அம்பேத்கர் சிலை அருகில், 25 வயதுடைய வடமாநில இளைஞர் இறந்துள்ளார்..

வெயில் தாக்கம்
இவர் பசி மயக்கத்தில் நடந்து சென்றபோது மயங்கி கீழே விழுந்து இறந்துள்ளது அதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இப்போதே இந்த அளவுக்கு வெயில் என்றால் அடுத்த மாதம் இதன் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற கலக்கம் சூழ்ந்து வருகிறது.. வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள பொதுமக்கள், நுங்கு, தர்பூசணி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை அருந்தி, தாகத்தை குறைத்து வருகின்றனர்...

டாஸ்மாக்
குடிமகன்களோ, டாஸ்மாக் கடைகளில் ஜில்லென பீர் வகைகளை வாங்கி குடித்து உடல் சூட்டை தணித்து கொண்டு வருகிறார்கள்.. இதையே சாக்காக வைத்து, நாமக்கல் மாவட்டத்தில், பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளைவிட, பீர் வகைகளின் விற்பனை உயர்ந்துள்ளது... மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், மற்ற மதுவகைகளை காட்டிலும், பீர் ரகங்களின் விற்பனை அதிகமாக இருக்கும் என்றாலும், இப்போது பீர் ரகங்களின் விற்பனை, 11 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், இது இனிமேல் இன்னும் அதிகரிக்கும் என்றும் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கத்தரி வெயில்
இதனிடையே, கத்திரி வெயில் எனப்படும் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் வெயில் காலம் மே 4-ந்தேதி தொடங்கி மே 28-ந் தேதி முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது... இந்த காலக்கட்டத்தின்போது அனல்காற்று வீசும் என்பதால் பகலில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், குளிர்ந்த நீராகாரங்கள் பருகி வெப்பத்தை தணித்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications