கவுன்சிலர்களுக்கு ஆப்பு.. ஆளுங்கட்சினு கூட பார்க்காம அதிரடி காட்டிய ஸ்டாலின்! அந்த 4 பேர் யார் யார்?
சென்னை: சென்னையில் 4 மாமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பு வைக்க தயாராகி உள்ளது தமிழக அரசு. சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் மீது அதிகளவில் புகார்கள் கிளம்பிய நிலையில் திமுகவின் 3 கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர் ஒருவர் என 4 பேருக்கு நகராட்சி நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இவர்கள் 4 பேரின் பதவியும் பறிக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சியான சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இதில் 4 வார்டுகளின் கவுன்சிலர்கள் உயிரிழந்த நிலையில் 196 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் மீது தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் செய்து தருவதில்லை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிகள், அம்மா உணவகம் போன்ற இடங்களில் ஆய்வு செய்வதில்லை என்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.

சென்னை கவுன்சிலர்கள் மீது குவிந்த புகார்: குறிப்பாக, விரிவாக்கப்பட்ட மண்டலங்களான சோழிங்கநல்லூர், பெருங்குடி, ஆலந்தூர், மாதவரம் ஆகிய மண்டலங்களில் பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கும், வீடுகள் கட்டுவதற்கும் கவுன்சிலர்கள் அரசு நிர்ணயித்த பணத்தை விட கூடுதலாக பணம் கேட்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
ஸ்டாலின் டேபிளில் ரிப்போர்ட்: இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிந்த பின்னர், கடந்த ஜூன் மாதம் மாநகராட்சியில் உள்ள அனைத்து கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின், காவல்துறை நுண்ணறிவுப் பிரிவிடம் அறிக்கை கேட்டதாக தெரிகிறது. அதன்படி, முதல்வர் ஸ்டாலினின் டேபிளுக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது. இதில் திமுக கவுன்சிலர்கள் பலரே அரசுக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தி வருவதாக தெரியவந்தது.
அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து சென்னை மாநகராட்சியில் உள்ள 4 கவுன்சிலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலரே நேரடியாக, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகார்கள் காரணமாக நோட்டீஸ் பெற்ற கவுன்சிலர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த கவுன்சிலர்கள் யார் யார்?: திமுக கவுன்சிலர்கள் 3 பேர், அதிமுக கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 29 வது வார்டு திமுக கவுன்சிலர் கார்த்திகேயேன், 89 வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு, 193வது வார்டு அதிமுக கவுன்சிலர் கோவிந்தசாமி, 195வது வார்டு திமுக கவுன்சிலர் ஏகாம்பரம் ஆகிய நால்வருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 4 கவுன்சிலர்களின் விளக்கம் ஏற்கும் வகையில் இல்லையென்றால் இவர்கள் 4 பேரின் பதவியும் பறிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு, நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களின் பதவியை பறிப்பதில் ஏராளமான சட்ட சிக்கல்கள் இருந்தன. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின் அடிப்படையில், விதிமீறல்களில் ஈடுபடும் கவுன்சிலர்களின் பதவியை பறிக்க முடியும்.
பதவி பறிக்கப்பட வாய்ப்பு: இந்தச் சூழலில் தான், திமுகவின் 3 கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர் ஒருவர் என 4 பேருக்கு நகராட்சி நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் மட்டுமின்றி அனைத்து மாநகராட்சி கவுன்சிலர்களும் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications