மாநாடு நடத்திய மறுநாளே.. விஜய்க்கு அடுத்தடுத்து வந்த 3 சிக்கல்.. தவெக கொஞ்சம் சுதாரிச்சு இருக்கலாம்
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்திய மறுநாளிலேயே அந்த கட்சிக்கு ஏகப்பட்ட பிரஷர் வந்துள்ளது. அடுத்தடுத்து அந்த கட்சிக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட தொடங்கி உள்ளது.
சர்ச்சை 1: முதல் கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது பலியான 6 பேருக்கும் விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது பெரிய சர்ச்சையானது. கட்சி சார்பாக புஸ்ஸி ஆனந்த் மட்டுமே நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். ஆனாலும் விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று சர்ச்சையானது.

கடைசியில் வேறு வழியின்றி.. இரவோடு இரவாக விஜய் இரங்கல் தெரிவித்தார். நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,
வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்
திரு. JK.விஜய்கலை,
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்
திரு. வசந்தகுமார்,
கழகத் தோழர்
பாரிமுனை, சென்னை
திரு. ரியாஸ்,
கழகத் தோழர்,
பாரிமுனை, சென்னை.
திரு. உதயகுமார்,
கழகத் தோழர்,
செஞ்சி
மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த
திரு.சார்லஸ்
கழகத் தோழர்,
வில்லிவாக்கம்,
சென்னை
ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சர்ச்சை 2: இரண்டாவதாக விஜயை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் எம்பிக்கு விஜய் ரசிகர்கள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். விசிக மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
தவெக மாநாடு - ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பது.. அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது என்று திருமாவளவன் கூறி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் சில விழைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். சில நிலைப்பாடுகளையும் முன்மொழிந்துள்ளார்.
தனது கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிக்க வேண்டுமென அவர் ஆசைப்படுவது அவருக்கான சுதந்திரம்! நம்பிக்கை! ஆனால், பரிணாமத்தில் பல்வேறு படிநிலை மாற்றங்களை கடந்த பின்னரே உச்சநிலை மாற்றத்தை எட்டமுடியும் என்பது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மை!
'முதல் அடி மாநாடு! அடுத்த அடி ஆட்சிப் பீடம்! ' என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். அவரது நம்பிக்கைக்கு வாழ்த்துகள்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் வள்ளுவப் பெருமானின் சமத்துவக் கோட்பாட்டினைத் தனது முதன்மையான கொள்கையென உயர்த்திப் பிடிக்கும் அவர், 'பெரும்பான்மை - சிறுபான்மை' என்னும் பெயரிலான "பிளவுவாதத்தை" ஏற்பதில்லை என்றும் கூறுகிறார். இந்த நிலைப்பாடு பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு எதிரானது என்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது.
ஆனால், சங்பரிவார்களின் மதவழி பெரும்பான்மைவாதமும், அதனால் நிலவும் மதவழி சிறுபான்மையினருக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழலும் ஒன்றா என்னும் கேள்வி எழுகிறது. குறிப்பாக, சிறுபான்மையினரின் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் குறித்த அவரது நிலைப்பாடு என்ன என்பதுவும் கேள்விக் குறியாகிறது.
அடுத்து, ஃபாசிசம் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஃபாசிசம் என்பது பற்றிய அவரது புரிதல் விளங்கவில்லை. "அவங்க ஃபாசிசம்'னா நீங்க பாயாசமா ?" என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். ஃபாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி் செய்கிறார். அவர் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் ஃபாசிஸ்டுகள் தான் என்கிறாரா? அவர் யாரை நையாண்டி செய்கிறார்? திமுக'வையா? காங்கிரசையா? இடது சாரி கட்சிகளையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இயக்கங்களையா?
பாஜக - சங்பரிவார்களின் ஃபாசிசத்தை எதிர்க்கும் இவர்கள் அனைவருமே ஃபாசிஸ்டுகள்தான் என்று கிண்டலடிக்கிறாரா?
தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் "ஃபாசிச எதிர்ப்பு" என்பது பாஜக-சங் பரிவார் எதிர்ப்பு தான். இங்கே ஃபாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று அவர் கருதுகிறாரா? அப்படியெனில், பாஜக- சங்பரிவார் எதிர்ப்பு வேண்டாம் என கூறுகிறாரா? என்ன பொருளில் அந்த நையாண்டி தொனிக்கும் ஆவேச உரை வெடித்தது ?
பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பாஜகவை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம். ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு?
" கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார். இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார். ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை. அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை.
"திமுக எதிர்ப்பும் திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே" அவரது அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது. அவரது உரையில் வெளிப்படும் "அதிகார வேட்கையும் அடையாள அரசியலும்" பழைய சரக்குகளே! குடும்ப அரசியல் எதிர்ப்பு , ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்களே!
ஆக்கப்பூர்வமான- புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை. "பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல" ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. 'அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது.
ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். ஒட்டுமொத்தத்தில், பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது, என்றுள்ளார்.

சர்ச்சை 3:
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டு பேச்சில்.. ஒரு குறிப்பிட்ட விஷயம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. அவரின் பேச்சு சிலரை கவர்ந்து இருந்தாலும்.. சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும்.. ஒரு விஷயம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
நேற்று தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், தவெக அறிவிக்கும் போதே கதறல் கேட்டுச்சு. இந்த மாநாட்டுக்கு அப்புறம் இன்னமும் கதறல் அதிகரிக்கும். நாம் அவர்களுக்கு மட்டும் எதிரியா? கிடையாது.. நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும்.
யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள், என்று நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.
விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு: இதில் நடிகர் விஜயின் பாசிசம் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புகள் பதிவாகி வருகின்றன. பின்வரும் விமர்சனங்கள் இதில் வைக்கப்படுகின்றன. விஜய் பல விஷயங்களை பேசி இருக்கலாம்.. திமுகவை விமர்சிக்கலாம். ஆனால் பாசிசத்திற்கு எதிரான எந்த ஒரு கட்சியையும்.. பாயசம் என்று சொல்லி கிண்டல் செய்ய கூடாது.
விஜயின் அரசியல் முதிர்ச்சியின்மையை இது காட்டுகிறது. பாசிசத்தை எதிர்ப்பவர்களை பாயசம் என்று சொல்லி கிண்டல் செய்வது சரியாக இருக்காது. அவர் பலரின் போராட்டங்களை மலிவு படுத்துகிறார். பல மாநிலங்களில் மத மோதல் இருக்கிறது. பல மாநிலங்களில் புல்டோசர் அரசியல் இருக்கிறது. அப்படி இருக்க இதை எல்லாம் வைத்து கிண்டலாக பேசுவது விமர்சனம் ஆகி உள்ளது.












Click it and Unblock the Notifications