சென்னையில் பகீர்.. பைனான்சியர், மனைவி, மகன் சுட்டுக் கொலை.. சிசிடிவியில் துப்பு.. 5 தனிப்படை விசாரணை
சென்னை: சென்னை யானைக்கவுனி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை யானைக்கவுனி பகுதி.. இன்று இரவு மழை பெய்து வெள்ளம் முழங்கால் வரை ஓடிக்கொண்டு இருந்தது. திடீரென வாகனங்களில் அடுத்தடுத்து வந்து இறங்கினர் போலீசார்.
அந்த பகுதியை முற்றிலுமாக சீல் வைத்தது காவல்துறை. வெளியாட்கள், யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. உள்ளே இருந்து வெளியே செல்வதற்கும் அனுமதிக்கவில்லை.
"கன்னியாகுமரி வரை வாரிசு அரசியல்.. இது அபாயம்" பாஜக வெற்றி விழாவில் மோடி பரபரப்பு பேச்சு
புரியாமல் விழித்த மக்கள்
அங்கே வரிசையாக கடை வைத்திருந்த வணிகர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. 50க்கும் மேற்பட்ட போலீசார் அடுத்தடுத்து வாகனங்களில் வந்தனர். ஒரு சின்ன சந்து பகுதிக்கு உள்ளே உள்ள வீட்டை நோக்கி அவர்கள் ஓட்டமும் நடையுமாக சென்றனர். என்ன நடக்கிறது என்ற பதற்றம் அங்கிருந்தவர்களுக்கு ஒட்டிக் கொண்டது. அந்த சந்துக்குள் சென்ற காவல்துறையினர் ஒரு வீட்டுக்குள் புகுந்தனர்.
ஒரே வீட்டுக்குள் 3 சடலங்கள்
அப்புறம் தான் தெரிந்தது அந்த வீட்டுக்குள் மூன்று சடலங்கள் கிடப்பதும்.. இதை அறிந்துதான் காவல்துறையினர் அங்கு வந்துள்ளனர் என்பதும். அந்த வீட்டில் வசித்து வந்த தலில் சந்த், அவர் மனைவி புஷ்பா பாய், அவர்களின் மகன் ஷீத்தல் ஆகியோர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தனர். இதை காவல்துறையினர் மூலம் அறிந்து கொண்ட பிறகு தான், அந்த பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து உள்ளதே அப்பகுதி மக்களுக்கு தெரிந்துள்ளது. துப்பாக்கியால் சுடும் போது கூட எந்த ஒரு சத்தத்தையும் அங்கு உள்ளவர்கள் கேட்கவில்லையாம்.
விரைந்த போலீஸ்
இரவு 7 மணி அளவில், தலில் சந்த், புஷ்பா பாய் ஆகியோரின் மகள் பிங்கி என்பவர் இந்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதுதான் தங்கள் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்து கிடந்ததை பார்த்து அவர் கதறி துடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த உயிரிழப்பு எப்போது நடந்தது? இவர்கள் 3 பேரும் யாரால் சுடப்பட்டனர் என்று தெரியவில்லை.
சிசிடிவி காட்சியில் துப்பு
இதையடுத்து அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறை ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டிலிருந்து ஒருவர் ஓடும் காட்சி அதில் பதிவானதை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த துப்பு போலீசாருக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம் ஏற்பட்டு விட்டதா என்ற சந்தேகத்தை இந்த சம்பவம் உருவாக்கியுள்ளது. உயிரிழந்த 3 பேரின் உடலும் வீட்டுக்கு உள்ளேயே இருந்தது. தடயவியல் நிபுணர்கள் வந்து சோதனை போட்ட பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸ் கமிஷனர் பேட்டி
சம்பவ இடத்திற்கு நகர காவல்துறை ஆணையர் மகேஷ் அகர்வால் வந்து பரிசீலனை நடத்தினார். பின்னர், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: நான் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியுள்ளார். தடயவியல் நிபுணர்கள் வருகை தந்துள்ளனர். மோப்ப நாய்கள் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த கொலையின் பின்னணியில் என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்பது பற்றி விசாரித்து வருகிறோம். அறிவியல் பூர்வமாக கொலையாளிகளை கண்டுபிடிக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
5 தனிப்படைகள்
குடும்ப பிரச்சினை காரணமாக இவர்கள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. இறந்த தலில் சந்த், சவுகார்பேட்டையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை பிடிக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.