ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த இடத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகள்.. வாங்கி வந்தது இவர்களா? சிக்கிய 3 பேர்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தற்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இருவர், மற்றொருவரிடம் ஆந்திராவில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

24 பேரில் திருவேங்கடம் என்ற ரௌடி, போலீசார் விசாரணையின் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் பலரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சிலர் அவ்வப்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், நூர் விஜய், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி என 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாக பிரபல ரவுடி சம்போ செந்தில் மீது போலீசார் சந்தேகப்படுகின்றனர். சம்போ செந்தில், வெளிநாடு தப்பிச் சென்று உள்ளதாக கூறப்படும் நிலையில், சென்னை போலீசார் மத்திய அரசு உதவியை நாடி, இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடி ராஜேஷ் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் புதூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்புவின் கூட்டாளி.
கோபி, குமரன் ஆகிய இருவரும் ஆந்திராவில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து ரவுடி ராஜேஷிடம் கொடுத்ததும், ராஜேஷ், அந்த வெடிகுண்டுகளை ஹரிஹரனிடம் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கும்பல் கையோடு நாட்டு வெடிகுண்டுகளையும் எடுத்துச்சென்றிருந்த நிலையில், அவை ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications