"கிளைமாக்ஸ்" வந்தாச்சு போல.. ஆட்டம் குளோஸ்.. சத்தமில்லாமல் சாதித்த ஓபிஆர்.. அடுத்து என்ன?
எடப்பாடி பழனிசாமிக்கு சட்டரீதியான சிக்கல்கள் கூடிவருவதாக கூறப்படுகிறது
சென்னை: சட்டரீதியான விஷயங்களில் எடப்பாடிக்கு சிக்கல்கள் கூடி வரும் நிலையில், ஓபிஎஸ் டீம் தங்களுக்கு சாதமாகவே தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறதாம்.
அதிமுக விவகாரம் 3 மாத காலமாக நடந்து, இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.. இருவரில் ஒருவர்கூட, விட்டுத்தருவது போலவும் தெரியவில்லை.
அரசியல் கட்சியின் உட்பிரச்சனைகளை, ஒரு நீதிமன்றம் தீர்த்து வைப்பது என்பது அந்த அளவுக்கு சுலபமில்லை.. அரசியல் கட்சி பிரச்சனைகளுக்கான தீர்வை, அரசியல் கட்சிக்குள்ளேதான் தேட முடியும் என்பதை நம்மால் மறுக்க முடியாது.

சலசலப்புகள்
எனினும், அப்பீலுக்கு சென்றுள்ளதால், அந்த தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக் கொண்டிருக்கிறாராம்.. மற்றொருபக்கம், எடப்பாடி தரப்பினரை வளைத்து போடும் வேலையில் மும்முரமாகி வரும் ஓபிஎஸ், இனி வரும் நீதிமன்ற உத்தரவுகளும் தனக்கு சாதகமாகவே வரும் என்று நம்பிக்கையாக உள்ளாராம்.. இதுகுறித்து, அரசியல் நோக்கர்கள் பலவிதமான கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர்.

சேலஞ்ச்
அவைகளின் தொகுப்புதான் இவை: "சட்டரீதியாக 90 சதவீதம் வாய்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமே உண்டு.. அதேபோல, தனிநீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை, உடைப்பது என்பது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாக இருக்கிறது.. இதற்காக சட்ட ரீதியான மற்றும் வலுவான வாதங்களை முன்வைத்தால் மட்டுமே, ஓரளவு எடப்பாடிக்கு சாதகமாக நிகழலாம்.. அதிசயம் நடந்தால்தான் அந்த சாதகமான உத்தரவும் வரக்கூடும்.. எப்படி பார்த்தாலும், இனி வரும் அடுத்தடுத்த உத்தரவு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகவே இருக்கக்கூடும். காரணம், சட்டரீதியான விவகாரங்களில் அவர் வலுவாகவே இருக்கிறார்.

ரவீந்திரநாத்
அதுமட்டுமல்ல, கடந்த மாதம் டெல்லியில் சில முக்கிய தலைவர்களை ஓபி ரவீந்திரநாத் சந்தித்துள்ளார்.. அதில், முக்கியமானவர் சட்டத்துறை அமைச்சரும்கூட.. இந்த சந்திப்பு, பல சாதகமான விஷயங்களை ஓபிஎஸ்ஸுக்கு பெற்றுத்தரலாம்.. சட்டத்தின் சாதகமான சூழல் ஓபிஎஸ் டீமுக்கே உண்டு என்றாலும், மேலிட கரிசனங்களும், முக்கிய நபர்களின் ஆதரவுகளும் பக்க பலமாக வலு சேர்த்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது.. இதுவும் எடப்பாடிக்கு சிக்கல்தான்.

பாஜக
ஒருவேளை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும் என்று கோர்ட் உத்தரவு வந்துவிட்டால், 11-ம்தேதி பொதுக்குழு குறித்து, ஜெயச்சந்திரன் தீர்ப்பையே ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டால், அதுதான் சிக்கலாக உருவெடுக்கும்.. அதிலும் எடப்பாடி அப்போது என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதுதான், எதிர்கால அவரது அரசியலையே தீர்மானிக்கும்.. அதுமட்டுமல்ல, முழுக்க முழுக்க அதிமுக உட்கட்சி விவகாரம் என்றாலும், பாஜகவை தவிர்த்துவிட்டு பார்க்க முடியாது.. பாஜகவுடன் நேரடியாகவே எடப்பாடி மோத தயாராகிவிட்டாரா? அல்லது மேலிட அதிருப்தியை சரிக்கட்டுவாரா? என்பதும் தெரியவில்லை.

இலை + தலை
இந்த மோதலால் இலை முடங்கிவிடாமல் இருக்க வேண்டும்.. அப்படியே இலை முடங்கினாலும் அதையும் எதிர்கொள்ள எடப்பாடி தயாரானாலும், அவருடைய ஆதரவாளர்கள் "இலை" இல்லாமல் எடப்பாடி அணியை ஏற்றுக்கொள்ள சம்மதிப்பார்களா? என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.. அதனால், பாஜகவை எடப்பாடியால் முழுமையாக தவிர்க்கவும் முடியாது, இணைத்துக் கொண்டு செயல்படவும் முடியாது.. ஆகமொத்தம், பொதுக்குழு விவகாரம் முதல் அனைத்து விஷயங்களையும், அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டு, இப்போது குழம்பி போயுள்ளதாக தெரிகிறது..

2 முன்னாள்கள்
இதற்கிடையே, அதிமுகவை ஒருங்கிணைக்க புரட்சிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஓபிஎஸ் சொல்லி உள்ளார்.. இதுவும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி அணியில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை, தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளிலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.. இதில் 2 மாஜிக்கள் ஆதரவும் தெரிவித்துள்ளார்கள்.. 30 எம்எல்ஏக்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.. இதுவும் எடப்பாடிக்கு சிக்கல்தான்.. எடப்பாடி பழனிசாமியை கழட்டிவிட்டுவிட்டு, பொதுக்குழுவை கூட்டவும் ஓபிஎஸ் டீம் தயாராகி வருகிறது.. இதற்கு டிடிவி, சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கவும் முடிவு செய்து வருகிறார்கள்.. இதுவும் எடப்பாடிக்கு சிக்கல்தான்.

100 கோடியாமே
27 மாவட்ட செயலாளர்களிடம் சசிகலாவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.. இதுவும் எடப்பாடிக்கு சிக்கல்தான்.. இந்த அணி தாவல் முயற்சிக்காக 100 கோடி ரூபாயை களமிறக்கவும், சசிகலா தரப்பு ஓகே சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.. டிடிவி தினகரன் கேட்டே உதவி செய்யாத சசிகலா,ஓபிஎஸ்ஸுக்காக இந்த முயற்சிகளை எடுத்து வருவதும், எடப்பாடிக்கு சிக்கல்தான்.. செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி போன்றோரிடம் தூது முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவர்களும் ஓபிஎஸ் பக்கம் வந்துவிட்டால், தென்மண்டலங்களில் இருக்கும் செல்வாக்கு மேலும்குறைவது, எடப்பாடிக்குதான் சிக்கலாகும்' என்றனர்.












Click it and Unblock the Notifications