2026இல் 30 சீட்டு; மோடி பிளான்? தமிழிசை Out; ராஜா IN.. பாஜகவில் சீமான்? : ரவீந்திரன் சொன்ன ரகசியம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை அடிப்பதன் மூலம் அதிமுகவை பலவீனப்படுத்தி பாஜகவை எப்படி 2வது இடத்திற்குக் கொண்டுவர அண்ணாமலை திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகிறார் என்பதை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி போட்டு உடைத்துள்ளார்.
அண்ணாமலை சர்வதேச அரசியல் பற்றி படிப்பதற்காக 3 மாதக் காலம் லண்டன் சென்றுள்ளார். எனவே அவரது பொறுப்பைக் கவனிக்கவும் கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்க ஹெச்.ராஜா தலைமையில் புதிய குழு ஒன்றை பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ளது. இடைக்கால மாநிலத் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்படலாம் எனச் சிலர் கூறிவந்த நிலையில் இந்தக் குழு போடப்பட்டுள்ளது. இதைத் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் தமிழிசை ஏன் இடம்பெறவில்லை என ஒரு பக்கம் விவாதிக்கப்பட்டும் வருகிறது.

அண்ணாமலை 3 மாதங்கள் ஊரில் இல்லாதது பாஜக தொண்டர்களுக்கு இலாபமா என தெரியவில்லை. அதிமுகவினர் குஷி 'மூட்’டிற்குள் சென்றுள்ளனர். பாஜகவினர் சைலண்ட் மோட்டில் உள்ளனர். ஆனால், திமுகவுக்கு எதிரான அரசியலை ஹெச். ராஜா தலைமையிலான குழு கையில் எடுக்கும் என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. மேலும் அண்ணாமலை ஒரு தொலை நோக்கு திட்டத்துடன்தான் எடப்பாடி பழனிசாமியை டார்கெட் செய்து அடிக்கிறார் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார். எடப்பாடியை அரசியல் ரீதியாக ஓரங்கட்டவே மோடி அண்ணாமலையைப் பயன்படுத்தி வருகிறார் என்றும் அவர் சொல்கிறார்.
அண்ணாமலை வெளிநாடு பயணம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அரசியல் வியூகம் எனப் பலவற்றைப் பற்றி பேசிய ரவீந்திரன் துரைசாமி, “அண்ணாமலை லண்டன் போகிறார் என்ற செய்தி வெளியானது, கேடி ராகவன் தலைவராக போகிறார், தமிழிசை தலைவராகப் போகிறார் என்று என்னவெல்லாம் வதந்தி கிளப்பினார்கள்? அதில் ஒன்றாவது நடந்ததா? காது முதலில் வரும். கொம்பு பின்னால் தான் முளைக்கும். அண்ணாமலைதான் அந்தக் கொம்பு. அதை வைத்து எடப்பாடி பழனிசாமியை முட்டுவதுதான் முக்கியம். அதை மோடி செய்கிறார்.
அதிமுக இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்காது என்றுதான் பலரும் நினைத்தார்கள். அதற்கு மாறாக திடீரென்று அந்தச் சின்னம் எடப்பாடி கையில் தேர்தல் ஆணையம் வழங்கிவிட்டது. சின்னம் கிடைத்த பிறகு பாஜகவுக்கு 5 சீட்டு 4 சீட்டு என அவர் பேரம் பேச ஆரம்பித்துவிட்டார். 2026 பாஜக பலம் பெற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியைப் பலவீனப்படுத்த வேண்டும். அப்போதுதான் திமுகVs பாஜக என்ற நிலை உருவாகும். அப்படித்தான் பாஜக 2வது இடத்திற்கு வர முடியும்.
அண்ணாமலை என்னதான் கொம்பு எனச் சொன்னாலும் அவர் வருவதற்கு முன்பே கட்சிக்காக உழைத்த காதுகளும் இருக்கின்றன. அதற்கு ஒரு மரியாதை அளிக்க வேண்டும். அதனடிப்படையில் தான் இப்போது ஒரு குழு போடப்பட்டுள்ளது. அண்ணாமலை வரும் அவரை அவர்கள் கட்சியை வழி நடத்துவார்கள். மாநில பாஜகவைப் பொறுத்தவரை அண்ணாமலையால் கட்சி வளர்ந்துள்ளது. தமிழிசை தலைமையில் போன்சாய் செடி போல இருந்த 3.7% , எல்.முருகன் தலைமையில் 2.7%, பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் 5.5% என இருந்த கட்சியை அண்ணாமலைதான் 11.4% ஆக கொண்டு வந்தார். அதுவும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை டெபாசிட் இழக்க வைத்தவர் அண்ணாமலைதான். அந்த பவர் அவருக்கு இருக்கிறது. அதை கட்சி மேலிடமும் உணர்ந்துள்ளது.
அண்ணாமலைதான் சசிகலாவைத் தள்ளி வைத்துவிட்டு டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டுவந்தார். பன்னீர்செல்வத்தைக் கொண்டுவந்தார். வருங்காலத்தில் தேமுதிகவை உள்ளே கொண்டுவரலாம். இன்னும் சொல்லப் போனால் சீமானைக் கூட நிதிஷ்குமார் பாணியில் மோடி கூட்டணிக்குள் கொண்டுவரலாம். என்.டி.ஏ மற்றும் இந்தியா கூட்டணிக்குள் வராத பல மாநிலக் கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை இழந்தன. அப்படியான காலத்தில் சீமான் வளர்ந்துள்ளார். அது மோடியின் கவனத்தை இழுத்துள்ளது. சீமான் பின்னால் உள்ள ஓட்டுகள் கிறிஸ்துவ, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவை அல்ல. இந்துக்கள் வாக்குகள் தான் அவருக்கு விழுந்துள்ளன. ஆகவே பாஜகவுக்கு சீமான் மீது ஒரு கண் உள்ளது.
பாஜகவில் இப்போது போடப்பட்டுள்ள குழுவில் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோரின் கைவரிசையும் இருக்கிறது. இவர்கள் உயர்வான பதவிகளிலிருந்தவர்கள். எனவே தனது ஆதரவாளர்களை மறைமுகமாகக் களம் இறக்கி உள்ளனர். மைய குழு அதை ஏற்றுக் கொண்டு இவர்களை நியமித்துள்ளது. ஹெச்.ராஜா பாஜகவில் சீனியர். அவரை முன் மொழிந்துள்ளனர். இதில் கேசவ விநாயகம் வழக்கம் போல் பின்புலமாக இருந்து செயல்படுவார். அவர் எப்போது பதவிக்காக ஏங்குபவர் அல்ல. அவர் எம்.எல்.ஏ மற்றும் எம்பி சீட்டு கேட்டு வரிசையில் நிற்பவர் அல்லர். கட்சிக்காக உழைக்கக் கூடியவர். அவர் பாஜகவை முன் நிறுத்துவார். அண்ணாமலை முன் நிறுத்துவார். கட்சியை வளர்க்க அவர் வேலை செய்வார்.
இன்றைக்கு அண்ணாமலையின் கொடும்பாவியை அதிமுகவினர் எரிக்கிறார்கள். அப்படி என்றால், அவர் அரசியல் ரீதியாக வளர்ந்துவிட்டார் என்பதே அர்த்தம். வைரத்தை வைத்து வைரத்தை அறுக்க முடியும் என்பதைப்போல ஒரு கவுண்டரை வைத்தான் ஒரு கவுண்டரை வீழ்ந்த மோடி முயற்சி செய்து வருகிறார். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி 5.5% வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்ததன் மூலம் அந்தச் சமூகத்தினர் மத்தியில் மட்டும்தான் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். நாடார், கவுண்டர், தேவர் ஆகிய சமூக மக்கள் அவரை ஆதரிக்கவில்லை. ஆகவேதான் தென் தமிழ்நாட்டில் அதிமுக வாக்கு சதவீதம் 33இல் இருந்து 20க்கு கீழாக இறங்கி உள்ளது.
ஆக, அதிமுக வீக் ஆக உள்ள இடங்களை எல்லாம் கண்டறிந்து அங்கே என்.டி.ஏ கூட்டணியை வளர்ப்பதே அண்ணாமலையின் தேர்தல் வியூகம். அதன்படி அவர் செயல்பட்டால் 2026இல் 30 சீட்டுகளைப் பிடிப்பார். முதல்வர் வேட்பாளராக அன்புமணி, சீமான் என யாரை கூட்டணி முன்னிறுத்தினாலும் அதற்காக உழைப்பார். அதையே மோடியும் மனதில் வைத்துச் செயல்படுகிறார். வெற்றிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்.












Click it and Unblock the Notifications