2 இடங்களுக்கு 300 பேர் கடிதம்! அதிமுகவில் ராஜ்யசபா சீட் வாங்க போட்டி போட்டி! என்ன செய்யப் போகிறது தலைமை?
சென்னை: அதிமுகவில் 2 ராஜ்யசபா இடங்களுக்கு 300 பேர் போட்டி போட்டு கடிதம் கொடுத்துள்ளதால் வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது அக்கட்சியின் தலைமை.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் ராஜ்யசபா சீட் வாங்குவதற்காக கோவை, சேலம், சென்னை, தேனி என முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.
ஏற்கனவே பதவியில் இருந்தவர்களுக்கு பதிலாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கவே எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாராம்.

ராஜ்யசபா தேர்தல்
தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் காலியாகும் 57 பதவியிடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிமுக எம்.பி.க்கள் 3 பேரின் பதவிக்காலமும், திமுகவில் 3 பேரின் பதவிக்காலமும் முடிவடைகிறது. இதையடுத்து இப்போது நடைபெறவுள்ள தேர்தலில் சட்டமன்ற் உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் திமுக 4 இடங்களிலும் அதிமுக இரண்டு இடங்களிலும் வெல்லும்.
அந்த வகையில் அதிமுகவுக்கு கிடைக்கக் கூடிய 2 தான் 300 பேர் கடிதம் கொடுத்துவிட்டு காத்திருக்கின்றனர்.

முக்கியப் பிரமுகர்கள்
அதிமுகவில் ராஜ்யசபா சீட் எதிர்பார்ப்பவர்கள் பெரும்பாலானோர் அக்கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களே ஆவர். இதனால் ராஜ்யசபா சீட் கேட்டு காத்திருக்கும் ஒவ்வொருவருமே ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.க்கு முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள். பெரியளவில் நம்பிக்கை வைத்தும், எதிர்பார்த்தும் சீட் கிடைக்காதவர்கள் மனம் வருந்தாத வகையில் அவர்களுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கொடுப்பது பற்றியும் அதிமுக மேலிடம் யோசித்து வருகிறதாம். மே 20-ம் தேதிக்கு முன்னதாக அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வாரிசுகள் போட்டி
அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வாரிசுகள் பலர் ராஜ்யசபா சீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு அங்கு நிறைவேறாது என்பது தான் நமக்கு கிடைத்த தகவல். திமுகவில் வழக்கறிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஏற்கனவே வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோருக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்போதும் வழக்கறிஞர் கிரிராஜனுக்கு ராஜ்யசபா சீட் தரப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் இரண்டு இடங்களில் ஒரு இடம் வழக்கறிஞர் ஒருவருக்கு ஒதுக்கப்படும் என்பது நமக்கு கிடைத்த தகவலாகும். மீதமிருக்கும் அந்த ஒரு இடம் தான் யாருக்கு என்பது அதிமுகவில் மில்லியன் டாலர் கேள்வியாகும்.

யூகங்கள் தவிடுபொடி
அதிமுக என்றாலே யூகங்களை தவிடு பொடியாக்கும் என்ற பிம்பம் அக்கட்சிக்கு உண்டு. கடந்த காலங்களில் எல்லாம் ஜெயலலிதா அப்படித்தான் யாருமே எதிர்பார்க்காத கற்பனைக்கு கூட எட்டாத நபர்களை எல்லாம் வேட்பாளர்களாக்கி எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர் என பல பதவிகளுக்கு கொண்டு வந்திருக்கிறார். இதனால் அதே பார்முலாவை எடப்பாடி பழனிசாமி இப்போது பின்பற்றுவார் எனக் கூறுகிறார்கள் உள் விவரம அறிந்தவர்கள். நகர, ஒன்றிய அளவில் கட்சிப் பொறுப்பில் உள்ள ஒருவருக்கு தான் டெல்லி செல்லும் வாய்ப்பை இ.பி.எஸ்.உருவாக்கித் தர உள்ளாராம். இதனால் அதிமுகவில் ராஜ்யசபா தேர்தல் களம் பரபரத்துக் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications