"33% வோட் பேங்க்".. கலைஞரின் பயந்த "பாலிட்டிக்ஸ்".. ஸ்டாலினை ரசிக்கும் ராமதாஸ்: சொல்வது யார் பாருங்க
கலைஞர் கருணாநிதியின் அரசியல் குறித்து ரவீந்திரன் துரைசாமி கருத்து கூறியுள்ளார்
சென்னை: ஸ்டாலினின் அரசியல், டாக்டர் ராமதாஸுக்கு பிடித்துப்போய்விட்டது, அதனால்தான் திமுக கூட்டணியுடன் இணைய ஆர்வமாக இருக்கிறது பாமக என்று, அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில் தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அதேபோல நம் தமிழகத்திலும் தேர்தலுக்கான முனைப்புகள் காட்டப்படுகின்றன. கூட்டணி பேச்சுக்களும் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கி உள்ளன.
திமுகவை பொறுத்தவரை, கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருவதால், அந்தவகையில் திமுக வலுவாகவே உள்ளது.
ஏன் போகல? அமித் ஷாவுக்கே போனை போட்ட எடப்பாடி.. வெற்றி சிரிப்பு சிரித்த ஓபிஎஸ்.. அது யார் தோனியா?
கிலி கலக்கம்
சில தினங்களுக்கு முன்பு, நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, மெகா கூட்டணி அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்கும் என்றார்.. எந்த கட்சிகளை மனதில் வைத்துக்கொண்டு எடப்பாடி இப்படி பேசினார் என்பதே பலரது ஆர்வமாக எழுந்து வருகிறது.. இந்நிலையில், அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி, நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவரிடம், தமிழக அரசியல் மற்றும் கூட்டணி சூழல் குறித்து கேள்விகளை முன்வைத்தோம்.. அதற்கு நம்மிடம் ரவீந்திரன் துரைசாமி சொன்ன கருத்துக்கள்தான் இவை:
33% வோட்பேங்க்
"எடப்பாடி பழனிசாமி சொல்லும் மெகா கூட்டணி என்பது இன்னைக்கு நடைமுறை சாத்தியமில்லை.. 33 சதவீத வாக்குபலத்தில் ஓபிஎஸ் + எடப்பாடி இருவரும் இணைந்து திமுகவை எதிர்க்கிறது என்றால், அது ஏற்றுக்கொள்ளக்கூடியது.. அதற்காக, எடப்பாடியிடம் 65 எம்எல்ஏக்கள் இருந்தால் மட்டும் வெற்றிவாய்ப்புக்கு என்ன கியாரண்டி வந்துவிடபோகிறது. எடப்பாடிக்கு அதிகபலமும், ஓபிஎஸ்ஸுக்கு கணிசமான வாக்கு பலமும் இன்றைக்கு உள்ளது என்றாலும், எடப்பாடிக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்தாக வேண்டும்.. அதாவது அந்த 33 வாக்கு சதவிகிதத்தில், எவ்வளவு தனக்கானது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
விஜயகாந்த்
அப்படி நிரூபிப்பதற்கு பல்வேறு வியூகங்களை கையில் எடுக்கிறார்.. அதில் ஒன்றுதான், மெகா கூட்டணி என்று சொல்கிறார்.. ஆனால், இதே ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் இணைந்தால் மெகா கூட்டணி நிச்சயம் அமைக்க முடியும்.. அதிமுக + ஓபிஎஸ் + பாஜக + தினகரன் + பாமக + மநீம + தேமுதிக என தோல்வியடைந்த எல்லாரும் சேர்ந்து கூட்டணி வைக்க ஏற்கனவே முயற்சி செய்யப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. இன்று மெகா கூட்டணி என்று சொல்லக்கூடியவர்கள், அடிப்படையான அதிமுக பலத்தையே சிதைத்துவிட்டீர்கள்.. ஓபிஎஸ்ஸையும் நீக்கியபிறகு, உங்களிடம் யார் கூட்டணிக்கு வருவார்கள்..
கண்டிஷன்
அண்ணாமலை மட்டும்தான் எடப்பாடி சொன்ன அந்த மெகா கூட்டணிக்கு வந்துள்ளார்.. அதுவும் இவர்கள் 2 பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கண்டிஷனும் போட்டுள்ளார். மோடி மதுரை வந்தபோதும், ஓபிஎஸ் + எடப்பாடி இருவரையும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தியுள்ளார்.. தற்போதைய அதிமுகவை பொறுத்தவரை இரட்டை இலை யாரிடம் உள்ளதோ அவர்களை வைத்து கட்சியை பார்க்க கூடாது, மாறாக, ஓபிஎஸ் + எடப்பாடி என்றே அதிமுகவை பார்க்க வேண்டும்.. காரணம், இரட்டை இலை இருந்தபோதும், ஜெயலலிதா டெபாசிட் இழந்திருக்கிறார், இரட்டை இலையை மீறி விஜயகாந்த் ஓட்டு எடுத்திருக்கிறார்..
தலை + இலை
இரட்டை இலையை மீறி எடப்பாடியும் வெற்றி பெற்றுள்ளார்.. இரட்டை இலை என்பது பலம் என்றாலும், அதே இரட்டை இலையை மீறிதான், தினகரனால் 2019-ல் வாக்குகளை அறுவடை செய்ய முடிந்திருக்கிறது.. அப்போது இலை என்றும் சாதிக்கவில்லை. அந்த பயம்தான் இப்போது பாஜகவுக்கு வந்துள்ளது.. கடந்த முறை தினகரன் வாக்குகளை பிரித்துவிட்டதுபோல், தென்மண்டலங்களில் ஓபிஎஸ் வாக்குகளை பிரித்துவிட்டால், அதிமுக வாக்கு வங்கிக்கு சிக்கலாகிவிடும் என்று நினைக்கிறது. அதேசமயம், ஓபிஎஸ்ஸுக்கு கொங்கு மண்டலத்திலும் செல்வாக்கு உள்ளது..
பவர்புல் லீடர்
எப்படியென்றால், ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்டவர், அவரது விசுவாசி என்ற அடையாளம் இன்னமும் கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் மீது உள்ளது.. அதுமட்டுமல்ல, அவரை கட்சியில் இருந்து எடப்பாடி நீக்கியதால், அனுதாபமும் ஓபிஎஸ்ஸூக்கு ஏற்பட்டுள்ளது.. அந்த வகையில் எடப்பாடி பவர்புல் செல்வாக்கு என்றால், ஓபிஎஸ்ஸுக்கும் செல்வாக்கு உள்ளது.. அவராலும் கணிசமான ஓட்டுக்களை பெற முடியும்.. இதை எடப்பாடி புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
கலைஞர்
சசிகலாவை அதிமுகவுக்குள் வேணாம்னு சொன்னது எடப்பாடிதானா? அவர்தான் சசிகலாவை வேண்டாம் என்று சொன்னாரா? 100 சதவீத இடம் சசிகலாவுக்கு கட்சிக்குள் இல்லை என்று எப்போது எடப்பாடி சொன்னார் தெரியுமா.. டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசிவிட்டு, அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோதுதானே, அந்த வார்த்தையை சொன்னார்.. 2021-ல் சூழல் அப்படி இருந்தது. அதேபோல ஸ்டாலினுக்கு இணையான தலைவர் எடப்பாடி கிடையாது.. ஆனால், ஜெயலலிதா + கருணாநிதி போல, தன்னை ஸ்டாலினுக்கு எதிராக கட்டமைத்து கொள்ள பார்க்கிறார்.. அதற்காகவே, ஓபிஸையும் தலையெடுக்க விடாமல், தினகரனின் வாக்கு வங்கியையும் அதிகரித்துவிடாமல், பாஜகவையும் கட்டுப்படுத்தி வைத்து கொள்ள வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறார்..
கருணாநிதி
மற்றொருபக்கம் டாக்டர் ராமதாஸ், ஸ்டாலினை எதிர்பார்க்கிறார்.. 2 முறை பாமகவை தோற்கடித்துள்ளார் ஸ்டாலின்.. அந்தவகையில், கலைஞரைவிட, இந்த விஷயத்தில் உயர்ந்திருக்கிறார் ஸ்டாலின்.. கலைஞர் பயந்து பயந்து அரசியல் செய்வார்.. அதனால்தான், அவர் 1977-க்குபிறகு 20 எம்பி சீட்டுக்கு மேல் தாண்டவில்லை.. ஆனால், ஸ்டாலின் அந்த எண்ணிக்கையை தாண்டிவிட்டார் என்றால் அவர் முன்னெடுக்கும் அரசியல் வேகம் எடுத்துள்ளது.. அதனால்தான், டாக்டர் ராமதாஸ், திமுக கூட்டணியில் இணைய நினைக்கிறார்.. ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, ராமதாஸ் நம்புவது எடப்பாடி பழனிசாமியைதான். இத்தனைக்கும் கடந்த முறை தோற்ற கூட்டணி என்றாலும், அதற்கான முயற்சியில் அவர் இறங்குவார்.