4 நாளில் 4 மில்லியன் வியூவ்ஸ்; விஜய் கொடி ஏற்படுத்திய ’வைப்’ : பாடகர் தீபக் சொன்ன சீக்ரெட்
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பற்றிய பாடலை பாடியுள்ள பாடகர் தீபக் புளு அது பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை கடந்த 4 நாட்கள் முன்னதாக விஜய் அறிமுகப்படுத்தினார். அதன் கூடவே கட்சியின் கொள்கை விளக்கப்பாடலும் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் இதுவரை 4 மில்லியன் வியூவ்ஸ் வரை ரீச் ஆகியுள்ளது. நான்கு நாட்களில் நாற்பது லட்சம் என்றால் ஒரு நாளைக்கு 10 லட்சம் மக்கள் அதனைப் பார்த்தும் கேட்டும் இருக்கிறார்கள். இந்தப் பாடலை விஜய்யின் தீவிர ரசிகர் பாடலாசிரியர் விவேக் எழுதி இருக்கிறார். இதனைப் பாடகர் தீபக் புளு பாடி இருக்கிறார். இவர் விஜய்க்காகப் பாடிய 'ஆளப் போறான் தமிழன்’ பாடல் இன்றுவரை அவரது ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த பாடலாக வலம் வந்துகொண்டுள்ளது.

இதுவரை சினிமாவில் விஜய்க்காகப் பாடியவர் தீபக், இப்போது அரசியல் கட்சி தொடங்கி உள்ள விஜய்க்காகப் பாடி இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை விளக்கப்பாடல் பாடும் வாய்ப்பு வந்தது எப்படி? இவர் விஜய் கட்சியின் இணைவாரா? அரசியலில் விஜய்யுடன் பயணிக்க இருக்கிறாரா? என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன. அதற்கு எல்லாம் விடை தரும் விதமாக தீபக் புளு ஒரு யூடியூப் சேனலுக்கு வழங்கி உள்ள பேட்டியில் விளக்கம் அளித்திருக்கிறார்.
தவெக கொடி பாடல் பற்றி தீபக் பேசும்போது, “என் வாழ்நாளில் முக்கியமான பாடல் இது. இந்த வாய்ப்பை தமன் தான் ஏற்படுத்திக் கொடுத்தார். இதைப் பாட அழைக்கும்போதே மிக முக்கியமான பொறுப்பு இது. விஜய் கட்சியின் முதல் பாடலைத்தான் நாம் பண்ண போறோம் என்று சொன்னார். தமனும் பாடலாசிரியர் விவேக் இருவரும் விஜய்யின் தீவிர ரசிகர்கள். இந்தப் பாடல்தான் கட்சியின் அடையாளமாக இருக்கப்போகிறது. அதற்கு ஏற்ப அதன் எனர்ஜி இருக்கவேண்டும் என முன்பே தமன் முடிவு செய்தார். பாடலின் ஆரம்பமே 10 பேர் சேர்ந்து பாடினோம். அப்பதான் அதில் ஒரு உற்சாகம் இருக்கும். கேட்கும் ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைக்கும். இந்தப் பாடல் வரிகளைப் படிக்கும் போதே எனக்கே அதன் உணர்ச்சியை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. ’ஆளப் போறான் தமிழன்’ பாடும்போது ஏற்பட்ட அதே வைவ் இதில் ஒரு மின்சாரம் போல பாய்ந்ததை உணர்ந்தேன்.

இந்தப் பாடலை முழுமையாகப் பாடி முடிந்த பிற்பாடு, அதன் அவுட் வெளிவந்த பிறகு பாடலாசிரியர் விவேக்கிற்கு, 'பிரதர் ஃபையர் விட்டிருக்கீங்க. விஜய் என்றாலே அதில் கூடுதலாக ஒரு உணர்ச்சியைக் கலந்து எழுதுகிறீர்கள்’ என்று ஒரு மெசேஜ் அனுப்பினேன். பாடலில், 'ரத்த சிவப்பில் நிறம் எடுத்தோம். ரெட்டை யானை பலம் கொடுத்தோம்’ என்ற வரிகள் வரும். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
எங்க டீம் எதிர்பார்த்ததைப்போலவே பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. விவேக் எழுதி இதுவரை 5 பாடல்களைப் பாடி இருக்கிறேன். அத்தனையுமே ஹிட். இந்தப் பாட்டும் அப்படித்தான். இந்த வெற்றியின் உச்சமாக ஒரு நாள் விஜய்யை நேரில் தனியாகச் சந்திக்க வேண்டும் என்பது ஆசை. நான் இதுவரை அவரை தனியாகச் சந்தித்ததே இல்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு அவர் காரணமாக இருந்திருக்கிறார். முதன்முதலாக 'ஜில்லா'வில் அவருக்காக ஒரு பாடல் பாடினேன். அதை இமான் கொடுத்தார். அடுத்த வாய்ப்பு ஏ.ஆர்.ரஹ்மான் தந்தது. 'மெர்சல்' படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' பாடலை விஜய்க்காகப் பாடினேன். இன்றைக்கும் என்னை பல மேடைகளில் பாட பலர் அழைக்க இந்தப் பாட்டு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. மீண்டும் 'வாரிசு' படத்தில் 'வா தலைவா' பாடினேன். 'தீ தளபதி'யும் தமன் கொடுத்த வாய்ப்புதான். இரண்டு பாடல்களும் செம ஹிட். அடுத்த இப்ப பாடியுள்ள கட்சி பாடல். இது மிகப் பெரிய மைல் ஸ்டோன் என்றுதான் சொல்வேன்.

நான் அவர் ரசிகர். அவர் சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் இறங்கி இருக்கிறார். இதனால் தமிழ்நாட்டில் பல சுவாரஸ்யமான விசயங்கள் நடக்க இருக்கின்றன. அதை விஜய்யும் பார்க்கப் போகிறார். நிறையச் சவால்களைச் சந்திக்கப் போகிறார். எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு ரசிகராக நான் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.












Click it and Unblock the Notifications