சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு.. “நான் தமிழ் மீடியம்” என நீதிபதி பெருமிதம்
சென்னை: உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் 4 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து உள்ளது.
உயா்நீதிமன்ற தலைமை பதிவாளா் பி.தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆா்.சக்திவேல், சென்னை தொழிலாளா் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.ராஜசேகா் ஆகிய நான்கு பேர் மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் 4 பேரையும் சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவியேற்ற 4 நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் 11 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்ற நீதிபதிகளை தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வரவேற்றார். புதிய நீதிபதிகளான சக்திவேல், தனபால் மற்றும் குமரப்பன் ஆகியோர் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்களாகவும், நீதிபதி ராஜசேகர் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராகவும், உயர் நீதிமன்றத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், உயர் நீதிமன்றத்தின் மரபுகளை உறுதிப்படுத்துவார்கள் என
நம்பிக்கை தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கும் மேல் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிய புதிய நீதிபதிகளின் அனுபவம் சிறந்த முறையில் பலனளிக்கும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்து உள்ளார். அதேபோல் பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள், புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர்.
அதன் தொடர்ச்சியாக நீதிபதி சக்திவேல் ஏற்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், "உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.
"பள்ளிப்படிப்பு முதல் தமிழ் வழியில் படித்தேன். தமிழ் வழியில் படித்த வழக்கறிஞர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம். இயலாதது என்ற எதுவுமில்லை." என்று நீதிபதி தனபால் பேசினார். நீதிபதி குமரப்பன், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications