தமிழகத்தில் 4,512 வேட்புமனுக்கள் ஏற்பு... திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் - சத்யபிரதா சாகு
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்புமனுக்களில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்புமனுக்களில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து பல கோடி ரூபாய்களையும், பரிசுப்பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இன்று வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும். இன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3.09 கோடி, பெண்கள் 3.19 கோடி பேர் உள்ளனர்.தமிழகத்தில் வாக்காளர்களாக 7,192 திருநங்கைகள் உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்புமனுக்களில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மாநிலம் முழுவதும் இதுவரை பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1.70 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ளதால் தேர்தல் தேதியில் ஏதேனும் மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சத்யபிரதா சாகு, திட்டமிட்டபடி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் அட்டவணை, வாக்கு எண்ணிக்கை தேதியில் எந்த வித மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications