20 ஆயிரம் கேம்ப்.. 20 லட்சம் டோஸ் டார்கெட்.. தமிழ்நாடு முழுவதும் 4வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 4வது மெகா தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 20 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வாரா வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மக்களுக்கு அதிக அளவில் வேக்சின் போடும் திட்டத்தில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் கொரோனா தளர்வுகள் அமலில் இருந்தாலும் மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் தொடர்ந்து 1700க்கும் கீழ் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,66,964 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எத்தனை பேர்
தமிழ்நாட்டில் புதிதாக 1,578 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 35,627 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,14,291 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். தமிழ்நாட்டில் 17,046 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

முகாம்
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று மெகா வேக்சின் முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. .முதல் வேக்சின் மெகா முகாமில் 29 லட்சம் பேர் வரை தமிழ்நாட்டில் வேக்சின் போட்டுக்கொண்டனர்.அதன்பின் கடந்த முகாமில் 16 லட்சம் பேர் வரை வேக்சின் போட்டுக்கொண்டனர். பின்னர் மூன்றாவது வேக்சின் முகாமில் 22 லட்சம் பேர் வரை வேக்சின் போட்டுக்கொண்டனர்.

நான்காவது முகாம்
இதையடுத்து 4வது மெகா தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 20 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் அதிக அளவு வேக்சின் போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதனால் இப்போது வரை தமிழ்நாட்டில் 4,78,37,342 டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது. 3,63,27,068 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

எங்கு
1,15,10,274 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இன்று இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுக்க மருத்துவமனைகளில் இலவச வேக்சின் போடப்படுகிறது. இதுபோக பெருநகரங்களில் மைதானங்களில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

முகாம் அமைப்பு
பள்ளிகள், கல்லூரிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் வேக்சின் போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் மக்களுக்கு பல பரிசுகள் வழங்கப்படுகிறது. வேக்சின் போட்டுக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு இதே வேகத்தில் வேக்சின் போடும்பட்சத்தில் இந்த வருட இறுதிக்குள் வேக்சின் போட தகுதி உள்ள எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் போட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications