நங்கநல்லூரில் கோயில் தீர்த்தவாரி உற்சவம்.. குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி.. நடந்தது என்ன?
சென்னை: சென்னை தாம்பரம் அருகே நங்கநல்லூர் கோயில் குளத்தில் தீர்த்தவாரியின் போது நீரில் மூழ்கிய 5 அர்ச்சகர்கள் பலியாகிவிட்டனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.
சென்னை தாம்பரம் அருகே மடிப்பாக்கத்தில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே மூவரசம்பட்டு குளம் உள்ளது. இது ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்குள்பட்ட குளமாகும்.
இந்த குளம் கவனிக்கப்படாமல் சேதமடைந்து காணப்பட்டது. குளத்தில் கழிவுகள் சேர்வதால் தண்ணீர் பச்சை நிறத்திற்கு மாறியிருந்தது. மேலும் நடைபாதை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி காணப்பட்டது.

இரண்டரை ஏக்கர்
இந்த குளம் இரண்டரை ஏக்கரில் இருந்தது. குளத்தை சுற்றி செடி , மரம் இருந்தது. இந்த நிலையில் இந்த குளத்தை தூர்வாரக் கோரி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆலந்தூர் எம்எல்ஏ தாமோ அன்பரசன் தலைமையில் இந்த குளம் தூர்வாரப்பட்டது.

குளத்தில் நீர்
இந்த நிலையில் இந்த குளத்தில் நீர் நிரம்பியுள்ளது. குளம் கண்ணாடி போல் காட்சியளிக்கிறது. இந்த குளத்தில் கோயில் தீர்த்தவாரியின் போது சுவாமி சிலையையும் சில அர்ச்சனை பொருட்களையும் நீரில் மூழ்கி எடுக்க அர்ச்சகர்கள் 25 பேர் குளத்தில் இறங்கினர். அப்போது அவர்கள் 2 முறை சுவாமி சிலையையும் அர்ச்சனை பொருட்களையும் மூழ்க வைத்து அவர்களும் மூழ்கினர்.

3ஆவது முறை
அதில் 3 ஆவது முறை அவர்கள் மூழ்கும் போது ஒரு அர்ச்சகரின் கால்கள் சேற்றில் சிக்கி அவர் தத்தளித்தார். இதை கண்ட மற்ற அர்ச்சகர்கள் பதறியடித்தபடி அவரை காப்பாற்ற முயன்றனர். இதில் அந்த அர்ச்சகர்களும் நீரில் தத்தளித்தபடியே மூழ்கினர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வரழைக்கப்பட்டனர். அவர்கள் படகு மூலம் தேடியதில் முதலில் 4 அர்ச்சகர்களின் உடல்களை மீட்டெடுத்தனர்.

4 சடலங்கள்
அவர்கள் ராகவன், லோகேஸ்வரன், பானேஷ், சூர்யா ஆகிய 4 பேரின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து 5ஆவதாக ஒருவரின் உடலும் கிடைத்தது. இதையடுத்து அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தீர்த்தவாரி கோயில் நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

20 அடி ஆழம்
இந்த குளத்தில் மூழ்கி இறந்தவர்கள் 18 வயது முதல் 24 வயதுக்குள்பட்டவர்கள். இந்த விழாவுக்காக போலீஸ் தரப்பில் இருந்து எந்த அனுமதியையும் கோயில் நிர்வாகம் கேட்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு வேளை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தால் இந்த அசம்பாவித சம்பவம் நிகழாமல் தடுத்திருக்கலாமோ என்னவோ! இந்த குளத்தின் ஆழம் 20 அடி இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications