வெளியே போறவங்க குடையோடு போங்க மக்களே..’இந்த’ 5 மாவட்டங்களில் மழை கன்பார்ம்! அதுவும் இன்று நாளையும்!
சென்னை: வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செ.மீ. மழையும், அவலாஞ்சியில் 8 செ.மீ. மழையும், வால்பாறை, பந்தலூர் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சோலையார், ஹரிசன் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும், வால்பாறை தாலுகா அலுவலகம், ஊத்துக்கோட்டை, மேல் பவானி, சின்கோனா ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வானிலை அறிவிப்பு
ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

14-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

சூறாவளிக்காற்று வீசக்கூடும்
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள், ஒடிசா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, வரும் 14-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications