லோக்சபா தேர்தலில் மோடி மேஜிக்- நரேந்திர மோடியின் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா?
பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. நரேந்திர மோடி என்ற மாபெரும் தலைவருக்கு வெற்றியை பரிசளித்திருக்கிறார்கள் நாட்டு மக்கள்.
சென்னை: நாட்டுக்குத் தேவை இளவரசனல்ல... அடித்தட்டு மக்களின் வலியை உணர்ந்த வலிமையான தலைவர்தான் என்பதை மக்கள் உணர்ந்து மீண்டும் மோடி தலைமையிலான பாஜக கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துள்ளனர். இந்த வெற்றி சாதாரணமானதல்ல. மோடிக்கு எதிரான எத்தனையோ பிரச்சாரங்களை பின்னுக்குத்தள்ளி ஒன் அன் ஒன்லி மோடி என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த லோக்சபா தேர்தலில் மோடி மேஜிக் செய்த வேலையை பார்க்கலாம்.
பணமதிப்பு நீக்கம் செய்து மக்களை படுகுழியில் தள்ளினார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி சிறு குறு நடுத்தர தொழில்களை நசுக்கினார். அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர் மோடி என்றும் பிரச்சாரம் செய்தனர். அத்தனை பிரச்சாரங்களையும் தூசு தட்டி தூரப்போட்டு மீண்டும் வெற்றி பெற்று எதிரிகளின் முன்பாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் மோடி.
2014ஆம் ஆண்டு மோடி பிரதமரானது முதல் இப்போது வரை ஏழை, நடுத்தர மக்களுக்கும், கிராம மக்களுக்கும் செய்த நலத்திட்டங்கள் இந்த வெற்றியை தேடித்தந்திருக்கிறது. கிராமங்களை சாலைகள் மூலம் இணைத்த மோடி மக்களை கவர்ந்தார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, உஜ்வாலா யோஜனா, கிராமங்கள் தோறும் மின்சாரம் என மோடி செய்த மேஜிக்குகள் இப்போது அதற்கான பலனை கொடுத்திருக்கிறது.
பாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன? வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்'
அனைவருக்கும் வீடு
சொந்த வீடு வேண்டும் என்பது அனைவரின் கனவு. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் பல லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மானிய விலையில் வீடு கட்டும் திட்டம் மோடிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறது. நடுத்தர மக்கள் பலரும் இன்றைக்கு சொந்த வீட்டுக்கு சொந்தக்காரர்கள் ஆனதுக்குக் காரணம் மோடியின் இந்த மேஜிக் திட்டம்தான்.
மக்கள் பணம் மக்களுக்கே
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆதார் திட்டம் கொண்டு வந்தாலும் அதை நிறுத்தாமல் செயல்படுத்தியது பாஜக அரசுதான். அரசு மானியம் மக்களுக்கு நேரடியாக கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது ஆதார் கார்டு. மானியம் பெறும் திட்டங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டதால் பல பயன்கள் கிடைத்தன. அரசு மானியம் மக்களுக்கு நேரடியாக கிடைக்காமல் யார் பாக்கெட்டுக்கோ போனது. கேஸ் மானியத்தை வங்கிகணக்கில் செலுத்தியதன் மூலம் மக்கள் பணம் மக்களுக்கு கிடைத்தது. கேஸ் மானியம் மட்டுமல்ல பல மானிய திட்டங்களின் பலன் நேரடியாக மக்களை சென்றடையச் செய்ததில் மோடி அரசு வெற்றி பெற்றது.
விவசாயிகளுக்கு 6 ஆயிரம்
அனைவரையும் வங்கிக்கணக்கு தொடங்க வைத்தவர் மோடி. அந்த வங்கிக்கணக்கில் மானியம் பணமாக சேர்க்கப்பட்டது. சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தை அறிவித்த போதே எதிர்கட்சியினர் ஏளனம் செய்தனர். அந்த ஏளனத்தை மவுனத்தால் வென்றார் மோடி.
பெண்களைக் கவர்ந்த மோடி
விறகு அடுப்பில் சமைத்து நோய் பாதிப்பிற்கு ஆளான பல பெண்களை மனதில் வைத்துதான் உஜ்வாலா யோஜான திட்டத்தை அறிமுகம் செய்தார். கோடிக்கணக்கான மக்கள் மானியத்தை விட்டுக்கொடுத்து மோடிக்கு ஆதரவாக நின்றனர். விளைவு ஏழை பெண்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் கிடைத்தது. புகையில் வெந்தவர்கள் எளிதாக சமைத்தனர். இந்த திட்டமும் மோடிக்கு ஓட்டுக்களை பெற்றுத்தந்தது.
கிராமங்கள் தோறும் மின்சாரம்
மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் கிராம மக்களுக்காக உழைத்தது. வெளிச்சம் இன்றி இருளில் தவித்த பல கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்தது. 2015ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் பேசிய பிரதமர் மோடி, 1000 நாட்களில் நாடு முழுவதும் கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்படும் என்றார். 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளிச்சம் பார்க்காத பல கிராமங்களில் மின்சார வசதி கிடைத்தது. இதுவே மோடிக்கு மீண்டும் வெற்றியைத் தேடிக்கொடுத்திருக்கிறது.
செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!
பேசி பேசியே ஓட்டு வாங்கிய மோடி
மோடி சிறந்த பேச்சாளர். 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமல்ல 2019ஆம் ஆண்டு பிரச்சாரத்திலும் வாக்காளர்களை கவர பல உத்திகளை கையாண்டார் மோடி. அவரை அம்பானி, அதானியின் நண்பன் என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே நன்மை செய்வார் என்று கூறினாலும் அதை தனது பேச்சினாலேயே சமாளித்து பதில் கொடுத்தார்.
எதிரிகளுக்கு கிலி
என்னதான் நாம் பலசாலியாக பாதுகாப்பாக இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரன் வம்புச்சண்டைக்கு வந்தால் அதை எதிர்க்கும், சமாளிக்கும் திறமை அவசியம். வீட்டு தலைவருக்கே அந்த தைரியம் வேண்டும் என்று நினைக்கும் போது நாட்டை ஆளும் தலைவர் வலிமையானவராக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். மோடி ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக், எதிர் நாட்டு முகாமில் தீவிரவாதிகளை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் இளம் தலைமுறை வாக்காளர்களை கவர்ந்திருக்கிறது. இத்தனை நல்ல அம்சங்களும் இணைந்துதான் மோடியின் வெற்றிக்கு காரணமான அமைந்துள்ளது.
நிலையான ஆட்சி
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் பாதிப்பு என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினாலும் கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் அவற்றை மறந்து விட்டனர் என்றே கூற வேண்டும். கூட்டணி ஆட்சியில் எதுவும் சாதிக்க முடியாது என்று நினைத்துதான் மக்கள் சிந்தாமல் சிதறாமல் பாஜகவிற்கு மீண்டும் பெரும்பான்மை கிடைக்கும் அளவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். நாடு பொருளாதார வல்லரசாக வேண்டும் என்றால் நிலையான ஆட்சி வேண்டும். வலிமையான தலைவரால் மட்டுமே அதை தரமுடியும் என்று நம்பி மக்கள் மோடிக்கு வாக்களித்திருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை வரப்போகும் 5 ஆண்டுகளில் அவரது ஆட்சியின் மூலம் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.