5 மாநில தேர்தல்.. ஜனவரி 22 வரை பேரணிகள், யாத்திரைகளுக்கு தடை நீட்டிப்பு.. ஆணையம் கட்டுப்பாடு
சென்னை: கொரோனா பரவலை முன்னிட்டு தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களில் ஜனவரி 22ம் தேதி வரை பேரணிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணிக்கு தேர்தல் ஆணையம் மூலம் தடை விதிக்கப்பட்டது.
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இந்த வருடம் நடக்க உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூர்- பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 - 2 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 நடக்க உள்ளது.
உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா.. இதுவரை 323,863,479 பேர் பாதிப்பு.. 5,546,541 பேர் பலி
தேர்தல்
5 மாநில சட்டசபை தேர்தலில் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு வாக்குச்சாவடிகளை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 16% அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5 மாநிலங்களிலும் ஜனவரி 15ம் தேதி வரை பேரணிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது. வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டங்களுக்கும், வெற்றி ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள் நிறைவு
இன்றோடு இந்த தேர்தல் கூட்ட கட்டுப்பாடுகள் முடிய உள்ள நிலையில் ஜனவரி 22ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 22ம் தேதி வரை அரசியல் கூட்டங்கள், சாலையில் நடக்கும் பொதுக்கூட்டங்கள், பேரணிக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மாறாக உள்ளரங்க கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 300 பேருக்கு மிகாமல் கூட்டங்களை நடத்த வேண்டும்.
உள்ளரங்கு கூட்டம்
உள்ளரங்குகளில் இருக்கும் இருக்கைகளில் 50 சதவிகித பேர் மட்டுமே அமர வேண்டும். இல்லையென்றால் மாநில அரசு விதிகளை பின்பற்றி கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர், தேர்தல் நடக்கும் 5 மாநில அரசின் சுகாதாரத்துறை செயலாளர்கள், தலைமை செயலாளர்கள் இன்று கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தின் முடிவில் இத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கொரோனா
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா விதிகளை மீறியதாக உத்தர பிரதேசத்தில் 2500 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் மக்கள் பலர் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிலை நீடிக்கிறது. பல இடங்களில் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளது.