ஆணவத்துடன் பேசிய பிரதமர் மோடிக்கு மரண அடி... ஸ்டாலின் கடும் தாக்கு
Recommended Video
சென்னை: ஆணவத்துடன் பேசிய பிரதமர் மோடிக்கு மக்கள் தந்த மரண அடிதான் 5 தேர்தல் முடிவு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது
இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்கின்ற வகையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாசிச பாஜகவை வீழ்த்தி, மதநல்லிணக்கமும் மாநில உரிமைகளும் மக்கள் ஜனநாயகமும் காப்பாற்றப்படுகின்ற வகையில் ஒரு புதிய மெகா கூட்டணி தலைநகர் டெல்லியில் உருவாகியுள்ள நிலையில், அதற்கடுத்த நாளே அந்தக் கூட்டணியின் அடிப்படை நோக்கத்தை நாடெங்கும் வெற்றிச் செய்தியாக அறிவித்திடும் வகையில், மத்தியபிரதேசம்-ராஜஸ்தான்-சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும்போது பெரு மகிழ்ச்சி பிறக்கிறது.
வெற்றியை ஈட்டித் தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவிப்பது ஜனநாயக இயக்கமான திமுகவின் கடமையாகிறது. எல்லா தலைவர்களுமே மோடி அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மக்கள் படும் தாங்க முடியாத துயரங்களையும் தொடர்ந்து வரும் அவலங்களையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் அவசியம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
மதம்-மொழி-பண்பாடு என அனைத்துத் தளத்திலும் பன்முகத்தன்மையை சிதைத்த பாசிச பாஜக அரசு, ஜனநாயகத்திலும் மாற்றுக் கட்சியினரே இருக்கக்கூடாது என்கிற சர்வாதிகார சாகச மனப்பான்மையுடன், 'காங்கிரஸ் இல்லாத இந்தியா', 'கழகங்கள் இல்லாத தமிழகம்' என ஆணவத்துடன் பேசி வந்தது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி மாநில நிர்வாகிகள் வரை ஆணவத்துடன் பேசியதற்கு மக்கள் தந்துள்ள மரண அடிதான், பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் பாஜக வீழ்த்தப்பட்டுள்ளது. பாசிசத்திற்கு எதிரான போரில் இது தொடக்க வெற்றி. இனியும் தொடரும் இந்த வெற்றி. இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் பாசிச பாஜகவும் அதன் தயவில் காலம் தள்ளும் அதிமுக அரசும் வீழ்த்தப்படுவது நிச்சயம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.