சென்னை பாடியில் பிரபல தங்க நகைக்கடையில் ஊழியர்கள் செய்த வேலை.. ஆடிப்போன உரிமையாளர்
சென்னை: சென்னை பாடியில் உள்ள பிரபல தங்க நகைக்கடையில் ரூ.60 லட்சம் கையாடல் செய்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 54 ஜோடி தங்க கம்மல், 8 வைர வளையல் மற்றும் சங்கிலி உள்ளிட்டவற்றை திருடிய ஊழியர்கள், அதற்கு பதில் கவரிங் நகைகளை வைத்து கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் எப்படி சிக்கினார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தினமும் புதிய உச்சம் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 70 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் தங்கத்தின் விலை 13 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. வெறும் 3 நாளில் மட்டும் 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்கம் விலை உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், நகைக்கடை வைத்திருப்போர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரம் சாமானிய மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சிக்கலில் உள்ளார்கள்..

இந்நிலையில் தங்க நகைகளை திருடுவதும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வேலை செய்பவர்களே நகைக்கடைகளில் திருடுவது நடக்கிறது. சென்னை திநகரைச் சேர்ந்த பிரபல நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகளை கொண்டுள்ளது. சென்னையிலும் பல இடங்களில் கிளைகள் உள்ளன. அந்த வகையில் பாடியில் அந்த கடையின் கிளை பிரம்மாண்டமாக செயல்படுகிறது. அந்த நகைக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் ரூ.60 லட்சம் கையாடல் செய்ததாக கைதாகி உள்ளனர்.
சென்னை பாடியின் பிரபல நகைக்கடையின் மேலாளராக உள்ள சுரேஷ் என்பவர் கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறுகையில், எங்கள் கடையில் நகை பிரிவு மேலாளரான இளையராஜா தங்க, வைர நகை பிரிவில் நகைகளின் இருப்பை சோதனை செய்திருந்தார். அப்போது, 54 ஜோடி தங்க கம்மல், 8 வைர வளையல் மற்றும் சங்கிலி உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கும். நகையை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அந்த கடையில் நகைகள் பிரிவில் பணியாற்றி வரும் முத்துகிருஷ்ணன்(வயது29) மற்றும் விஜயகுமார்(37) ஆகியோர் கையாடல் செய்ததாக கைது செய்தனர். இவர்களில் முத்துகிருஷ்ணன், தங்க நகைகளை எடுத்து அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்துள்ளார்.
இவ்வாறு கையாடல் செய்த தங்க கம்மல்களை பல்வேறு பகுதிகளில் அடமானம் வைத்து, அதில் கிடைத்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விஜயகுமார், வைர நகைகளை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து தனது கடனை அடைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.. ஊழியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பாடி நகைக்கடை ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications