தமிழகத்திற்குள் வரும் 57 ஐஏஎஸ் அதிகாரிகள்! 39 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்த தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 39 தொகுதிகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியும், 3 ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4 ஆம் கட்ட தேர்தல் 13 ஆம் தேதியும், 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 20ஆம் தேதியும் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடந்து முடிந்துள்ளது.

7 ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி 57 லோக்சபா தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து, பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்புடன் சிசிடிவி கண்காணிப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வரும் ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகளும் அதன் பிறகு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்காக பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துள்ளது தேர்தல் ஆணையம். தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்களும், கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 39 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 57 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே வெளி மாநில கேடர்களைச் சேர்ந்த அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications