சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்க போகும் மழை.. குடையை மறக்காதீர்
சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி எடுக்கிறது. மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இதுதான் தலைநகரத்தின் தற்போதைய டிரென்ட்டாக இருக்கிறது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி எடுத்தது.
இதையடுத்து சென்னையில் கிண்டி, வடபழனி, கோயம்பேடு, வேளச்சேரி, அடையாறு, துரைப்பாக்கம், நுங்கம்பாக்கம், முகப்பேர், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அது போல் வேலூரிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அயனாவரம்,செங்கல்பட்டு,கலவை,குன்றத்தூர்,மதுராந்தகம்,மதுரவாயல்,நெமிலி,உத்திரமேரூர்,வாலாஜாபேட்டை பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அமைந்தக்கரை, எழும்பூர், ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், மாதவரம், பல்லாவரம், பூவிருந்தவல்லி, ஆலந்தூர், வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க போகிறது.
ஆனால் தென் மேற்கு பருவமழை காலத்திலேயே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த தென் மேற்கு சீசனில் தென் தமிழகமும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும்தான் பயன்பெறும் என்பார்கள். ஆனால் தற்போது பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
இதனால் காலையில் வெயில் அடித்தாலும் மாலை வேளைகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மனமும் குளிர்ந்துள்ளது. ஆனால் பல இடங்களில் மழை நீர் வடிகால் பணி, சாலை பணி, மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் மோசமாக உள்ளது. ஆங்காங்கே குண்டும் குழியுமான சாலைகளால் மக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் இன்னலுக்குள்ளாகிறார்கள்.
அதிலும் மழை காலத்தில் சொல்லவே வேண்டாம். அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, சாலையில் எது பள்ளம் என்றே தெரியாது. மழை காலங்களில் பலர் இந்த பள்ளங்களில் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் சாலைகளை செப்பனிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications