தமிழ்நாட்டில் 634 பாலங்கள்! பணிகளை ஸ்பீடாக முடிக்கணும்! அதிகாரிகளை வறுத்தெடுத்த அமைச்சர் எ.வ.வேலு!
தமிழ்நாட்டில் 634 பாலப்பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை.
சென்னை: கடந்த ஒரு மாத காலமாக ஈரோட்டில் முகாமிட்டு இடைத்தேர்தல் பணியில் மிக பிசியாக இருந்த அமைச்சர் எ.வ.வேலு கடந்த 2 நாட்களாக கோட்டைக்கு சென்று துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அப்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாலப் பணிகள் குறித்து மிக சீரியஸாக அதிகாரிகளை அழைத்து பேசிய அவர், எக்காரணம் கொண்டும் பணிகள் தாமதம் ஆகக் கூடாது என மிக கறாராக உத்தரவிட்டார்.
தலைமைச் செயகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பொறியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது;

பாலங்கள் முக்கிய பங்கு
எல்லாவித காலநிலைகளிலும், தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதில், பாலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாலங்கள் கட்டுமானப் பணிகள் தாமதம் ஏற்படுவதால், பாலம் கட்டுமானப் பணிக்கான செலவு அதிகரிக்கிறது. ஆற்றில் நீர் ஓடாத சமயத்தில் மட்டுமே கட்டுமானப் பணிகளை செயல்படுத்த வேண்டும். பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை நீர் ஓடாத காலமாக இருப்பதால், பாலத்தின் அடித்தளப் பணிகள் மற்றும் பிலோசில் (Below Sill) பணிகளை விரைந்து முடிப்பதன் மூலம் பிற பணிகளை வெள்ள நீரோட்டம் இருக்கும் காலத்திலும் செயல்படுத்த முடியும்.

பாலம் கட்டுமானப் பணி
பாலம் கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்னரே நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொண்டால் காலதாமதத்தை தவிர்க்க இயலும். அடித்தளம் வடிவமைக்க தேவையான மண் மாதிரிகள் உரிய இடங்களில், தேவையான ஆழத்தில் எடுத்து, ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு தேவைப்படும் வொர்க் ஃபிரண்ட் (Work Front) எனப்படும், நிலம் மற்றும் அடுத்தடுத்து தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் அனுமதிகளை தாமதமின்றி வழங்கிட வேண்டும்.

முன் அனுமதி
வனத்துறையின் அனுமதி, நீர்வளத்துறை அனுமதி போன்ற பிற துறைகளின் அனுமதிகளை விரைந்து பெறுவதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்க இயலும். டிசைன் மிக்ஸ், ஜாப் மிக்ஸ், பைல் லோடு டெஸ்ட் போன்ற ஆய்வுப் பணிகளை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்க முடியும்.

634 பாலங்கள்
1.4.2021 அன்று நிலுவையில் உள்ள மொத்த 306 பாலப் பணிகளில், 156 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2021-2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் எடுத்துக் கொள்ளப்பட்ட 775 எண்ணிக்கையிலான பாலப்பணிகளில், 567 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதேபோல் 2022-2023 ஆம் ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட 276 பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 634 பாலப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications