சோழா ஹோட்டலில் 7 நாற்காலிகள் யாருக்காக.. என்டிஏ பிரஸ் மீட்டில் இன்று அமித் ஷாவுடன் அமரப்போவது யார்?
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையிலுள்ள சோழா நட்சத்திர ஹோட்டலில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில், அந்த மேடையில் மொத்தமாக 7 நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. இதனால் அமித் ஷாவை தவிர்த்து தமிழ்நாட்டில் இருந்து எத்தனை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். இந்த 2 நாள் பயணத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் மாநில பாஜக தலைவர் தேர்வு ஆகிய பணிகளை அமித் ஷா மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நேற்றிரவு சென்னை வந்த அமித் ஷாவிற்கு தமிழக பாஜக தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை அமித் ஷா சந்தித்திருக்கிறார்.
இந்த நிலையில், பாஜகவின் முக்கிய நிர்வாகியான தமிழிசை செளந்தரராஜன் வீட்டிற்கு அமித் ஷா சென்றுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தனின் மறைவுக்காக நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
அமித் ஷாவுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து துக்ளக் குருமூர்த்தியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்க உள்ளார். இந்த நிலையில் குருமூர்த்தி உடனான சந்திப்பிற்கு பின், அமித் ஷா செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டியில் உள்ள சோழா நட்சத்திர ஹோட்டலில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடக்கவுள்ளது. அந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கான மேடையில் மொத்தமாக 7 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதில் அமித் ஷா ஒரு நாற்காலியில் அமரும் பட்சத்தில், மீதமுள்ள 6 நாற்காலிகள் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாற்காலிகளுக்கு பின்னால் இருக்கும் திரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. இதனால் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் இன்று தமாகா தலைவர் ஜிகே வாசன் அமித் ஷாவை சந்தித்துள்ளார். இதனால் இரு நாற்காலிகளில் அதிமுக மற்றும் தமாகா அமர்ந்தாலும், மீதமுள்ள 4 நாற்காலிகள் யாருக்காக போடப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக ஓபிஎஸ், டிடிவி தினகரன், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வருவார்களா என்ற விவாதமும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications