24 குடும்பங்களை காத்த ஹீரோ.. திமுக வட்டசெயலாளருக்கு வழங்கப்பட்ட வீர தீர விருது.. ஏன் தெரியுமா?
சென்னை: திமுகவை சேர்ந்த வட்ட செயலாளர் தனியரசு என்பவருக்கு இன்று குடியரசுத் தின விழாவில் வீர தீர செயலுக்கான விருது அளிக்கப்பட்டு உள்ளது. அவர் செய்த சாதனை என்ன என்று பார்க்கலாம்!
குடியரசு தினவிழா நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னை மெரினாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார். சென்னை போர்நினைவு சின்னத்தில் முப்படை அதிகாரிகள் முன் மரியாதை செலுத்திய ஆளுநர் அதன்பின் மெரினாவில் தேசிய கொடியை ஏற்றினார்.
இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வீர தீர விருதுகளையும், பல்வேறு சாதனைகளை செய்தவர்களுக்கான விருதுகளையும் வழங்க உள்ளார். கடந்த வருடம் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.
குடியரசு தின கொண்டாட்டம்.. சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
தனியரசு விருது
அந்த வகையில் திமுகவை சேர்ந்த வட்ட செயலாளர் தனியரசு என்பவருக்கு இன்று குடியரசுத் தின விழாவில் வீர தீர செயலுக்கான விருது அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் 1993ல் கட்டப்பட்டு 1998ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த குடிசை மாற்று வாரிய கட்டிடம்தான் இடிந்து விழுந்தது.
கட்டிடம் இடிந்தது
இங்கு பி பிளாக்கில் இரண்டு நாட்களுக்கு முன் விரிசல் ஏற்பட்ட நிலையில் அங்கு 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அப்படியே இடிந்து கீழே விழுந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இவர்கள் வெளியேற்றப்பட்ட காரணத்தால் எந்த உயிர் சேதமும் இன்றி இவர்கள் எல்லோரும் தப்பித்தனர். 24 குடும்பங்கள் இப்படி உயிர் பிழைக்க காரணம் அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி வட்ட செயலாளர் தனியரசுதான். இவர்தான் துரிதமாக செயல்பட்டு 24 குடும்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
என்ன நடந்தது?
கட்டிடம் இடிவதற்கு முதல்நாள் அங்கு பி பிளாக்கில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி திமுக வட்டசெயலாளர் தனியரசுவிற்கு அதிகாலையில் இந்த தகவல் சென்றுள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கு வந்து பார்வையிட்டவர், கட்டிடத்தில் விரிசல் பெரிதானதை தனியரசு கவனித்து இருக்கிறார். அதோடு கட்டிடத்தின் உள்ளே மண் விரியும் சத்தமும் கேட்டு இருக்கிறது. கட்டிடம் விழ போவதை அவர் உணர்ந்து கொண்டு துரிதமாக செயல்பட்டு இருக்கிறார்.
காப்பாற்றினார்
இதனால் வேக வேகமாக எல்லோரின் வீடுகளுக்கும் சென்ற தனியரசு.. வரிசையாக எல்லோரையும் வெளியேற வைத்தார். கட்டிடம் இடிய போகிறது என்பதை சொல்லாமல்.. சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வெளியே போங்க.. அப்பறம் பேசிக்கலாம்.. சீக்கிரம் போங்க என்று கூறி வரிசையாக 80க்கும் மேற்பட்டோரை அங்கிருந்து வெளியேற்றி இருக்கிறார். இவர் சரியான நேரத்தில் சுதாரித்து வேகமாக செயல்பட்டதால் அன்று அத்தனை உயிர்கள் காப்பற்றப்பட்டன.
நேரில் அழைத்து பாராட்டு
இதனால் அன்றைய கட்டிட விபத்தில் ஒருவர் கூட காயம் அடையவில்லை. இவரின் தீரமான செயலை கேட்டு முதல்வர் ஸ்டாலின் தனியரசுவை நேரிலேயே அழைத்து பாராட்டி இருக்கிறார். நீங்கள் செய்தது மிக தீரமான செயல். பல பேரை காப்பாற்றி உள்ளீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். இந்த நிலையில்தான் தனியரசுவிற்கு இன்று குடியரசுத் தின விழாவில் வீர தீர செயலுக்கான விருது அளிக்கப்பட்டு உள்ளது. அவரின் சிறந்த செயலை பாராட்டும் வகையில் இந்த விருது அளிக்கப்பட்டது.