திரைக்கு பின்னால் நடக்கும் அவலம்.. விருப்பமே இல்லை என்றாலும்! ஓபனாக பேசிய நடிகை மும்தாஜ்
சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்த நடிகை மும்தாஜ், இப்போது முற்றிலும் வேறொரு வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுத்து இருப்பது ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் அவர் பகிர்ந்திருக்கும் கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகை மும்தாஜ் தற்போது முழுமையாக ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். வெள்ளை உடையில், மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்பட்ட அவர், தன்னுடைய தற்போதைய வாழ்க்கை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.

மும்தாஜ் பேட்டி
அதில் அவர் கூறியிருப்பதாவது: "நான் ஒரு நடிகையாக இருந்தபோது, என்னுடைய வாழ்க்கையும், கேரியரும் இயக்குநர்கள் கையில் தான் இருந்தது. முதல் நாள் ஒரு உடையை என்னிடம் காட்டுவார்கள், அதே உடை ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்னும் சிறிதாக இருக்கிறது, என்ன சார் இது என்று கேட்டால், இயக்குனர் தான் இப்படி குறைக்க சொன்னார் என்று சொல்வார்கள்.
இயக்குனரிடம் கேட்டால் அவர் கிளாமர் சாங்ஸ் மேடம் டிரஸ் சின்னதா இருந்தால்தான் நல்லா இருக்கும் என்று சொல்லிவிடுவார். இயக்குநர் சொன்னதை தான் நான் கேட்க வேண்டும். அதுதான் உண்மையான ஒடுக்குமுறை. ஒரு கிரியேஷனுக்காக, ஒரு வாய்ப்புக்காக, மற்றவர்களின் பேச்சைக் கேட்டு நான் வாழ்ந்திருக்கிறேன். இன்று அந்த வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியாக வாழ்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
ரசிகர்கள் கருத்து
மும்தாஜின் இந்த பேச்சு பலரிடமும் பேசுபொருளாக மாறியுள்ளது. சினிமா உலகின் மறுபக்கத்தை அவர் மிகவும் நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சிலர் கருத்து தெரிவிக்க, இன்னொரு தரப்பு அவர் எடுத்திருக்கும் புதிய வாழ்க்கை முடிவை பாராட்டி வருகின்றனர்.
நடிகை மும்தாஜ் பற்றி சொல்ல வேண்டும் என்றால், 1990களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முகமாக இருந்தவர். மோனிஷா என் மோனலிசா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். குறிப்பாக கவர்ச்சி பாடல்கள், வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
பிரபலம் கொடுத்த பாடல்
குஷி திரைப்படத்தில் இடம்பெற்ற "கட்டிப்புடி கட்டிப்புடிடா" பாடல் மூலம் மும்தாஜ் இன்னும் பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பிறகு பல தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார். ஒரு காலத்தில் தயாரிப்பாளர்கள் தேடிய நடிகையாக இருந்தவர்.
பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தினார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தார். அந்த நிகழ்ச்சியில் மிகவும் அமைதியான, வெளிப்படையான கேரக்டரை அவர் வெளிப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மும்தாஜின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. சினிமா, க்ளாமர் வாழ்க்கை, பொது நிகழ்ச்சிகள் என்று இருந்தவர் இப்போது மத நம்பிக்கையில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். இஸ்லாமிய வாழ்க்கை முறையை முழுமையாக பின்பற்ற ஆரம்பித்துள்ளார். எளிமையான வாழ்க்கை, ஆன்மிகம், தொழுகை, மதம் சார்ந்த செயல்பாடுகள் என்பதிலேயே தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
மனமாற்றம்
அவரை சமூக வலைதளங்களில் பார்க்கும் ரசிகர்களுக்கே இது பெரிய மாற்றமாக இருக்கிறது. ஒருகாலத்தில் திரை உலகில் கவர்ச்சி நாயகியாக இருந்தவர், இன்று முழுமையாக மத நம்பிக்கையில் தன்னை ஒப்படைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.
மும்தாஜின் இந்த மாற்றம் குறித்து ரசிகர்கள் பலரும் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். "வாழ்க்கை ஒவ்வொருவரையும் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லும்", "அவர் மன அமைதிக்காக தேர்ந்தெடுத்த பாதை இது", "எப்படி இருந்தாலும் அவர் சந்தோஷமாக இருந்தால் போதும்" என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.













Click it and Unblock the Notifications