ஆக்ரோஷமான தெருநாய்களை கருணை கொலை செய்ய அனுமதி! அதிகாரிகள் மீது வழக்கு பாயாது! உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தெருநாய்கள் தொல்லை நமது நாட்டில் பெரிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது ஆக்ரோஷமாக உள்ள நாய்கள் மற்றும் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களைக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், அப்படிக் கருணைக் கொலை செய்யும் அதிகாரிகளுக்கு முழு சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தெருநாய் பிரச்சனை கடந்த சில ஆண்டுகளாகவே விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா காலத்தில் தெருநாய்களை முறையாகக் கட்டுப்படுத்தாமல் விட்டதே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கிடையே தெருநாய் விவகாரத்தில் கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியது.

நீதிமன்றம்
அதாவது மக்கள் அதிகம் கூடும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் உள்ள தெருநாய்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், நாய்களைப் பிடித்து தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்தது.
கருணைக் கொலை
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் ரத்து செய்யப்பட்டது. அதாவது பொது இடங்களில் இருக்கும் தெருநாய்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் நாய்கள் மற்றும் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களைக் கருணைக் கொலை செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வெறிபிடித்த, குணப்படுத்த முடியாத ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட அல்லது கடுமையான ஆக்ரோஷத்துடன் மனிதர்களைத் தாக்கும் ஆபத்தான நாய்களைத் தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவ நிபுணர்களின் முறையான பரிசோதனைக்குப் பிறகு, விலங்கு வதை தடுப்புச் சட்டம் மற்றும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகளின்படி கருணைக்கொலை செய்ய அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நடவடிக்கை இல்லை
இந்தத் தீர்ப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், உச்ச நீதிமன்றத்தின் இந்த கடுமையான உத்தரவுகளைக் களத்தில் அமல்படுத்தும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் அதிகாரிகள் மீது பொதுவாக எந்தவொரு கிரிமினல் நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரிகள் மீது உடனடியாக விலங்கு நல ஆர்வலர்களால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அதற்காக அதிகாரிகள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்றும் இல்லை. அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கோ அல்லது உள்நோக்கத்துடன் செயல்பட்டதற்கோ போதிய முதற்கட்ட ஆதாரங்கள் இருந்தால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்
அதிருப்தி
மேலும் நீதிபதிகள் மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அவர்கள் மேலும், "ஆரம்பத்திலிருந்தே மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் முறையான நிதி ஒதுக்கீட்டுடன் 'ஏபிசி' திட்டத்தையும், தடுப்பூசி செலுத்துதலையும், உள்கட்டமைப்பையும் முறையாகச் செய்திருந்தால் இன்று நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது. ஏழைக் குழந்தைகள் குதறப்படுவதையும், முதியவர்கள் தாக்கப்படுவதையும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு நீதிமன்றம் சும்மா இருக்க முடியாது. இனிமேல் இந்த விதிகளில் அலட்சியம் காட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும்" என்றனர்.
5 முக்கிய உத்தரவுகள்
- நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு 'விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு' மையம் நிறுவப்பட வேண்டும்.
- அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 'ஆன்டி-ரேபிஸ்' தடுப்பூசி மருந்துகள் தங்கு தடையின்றிக் கிடைக்க வேண்டும்.
- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நெடுஞ்சாலைகளில் உள்ள தெருநாய்கள் மற்றும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
- விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் நீதிமன்றங்கள் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
- அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் இந்த விதிகளைச் செயல்படுத்தியது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் அந்தந்த உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டும்.














Click it and Unblock the Notifications