பனை விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்த விவசாய பட்ஜெட்! மதிப்புகூட்டு பொருள் தயாரிப்புக்கு 75% மானியம்
சென்னை: தமிழகத்தில் பனை மரங்களுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பனையின் மதிப்புக்கூட்ட பொருட்கள் தயாரிப்புக்கான கூடம் அமைத்தல், உபகரணங்களுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகின.
அப்போது 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனங்கன்றுகள் நடப்படும் என கூறப்பட்டது. ஏரிக்கரையில் பனைமரங்கள் வளர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டது.

பனை வெட்ட அனுமதி
மேலும் பனை மரத்தை வெட்டி விற்கவும், செங்கல் சூளைக்கு பயன்படுத்துவதை தடுக்கவும் அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறப்பட்டது. மேலும் தவிர்க்க முடியாத சூழலில் பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இன்றும் முக்கியத்துவம்
தற்போது இன்று 2வது முறையாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதிலும் பனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஊடகமான பனை ஓலைகள்
பராமரிப்பு இன்றி பலன் தருபவை பனைமரம். விதையிட்ட நாள் தவிர பிற நாள் கவனிக்காவிட்டாலும் கூட பனை தானாய் வளர்ந்து பயன்அளிக்கும் என நாலடியார் கூறுகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமாக பனை உள்ளது. பனைமரம் தமிழர் வாழ்வோடும், மொழியோடும் இணைந்துள்ளதற்கு சங்க இலக்கியங்களே சான்று. தமிழ் மொழியின் ஆரம்பகால ஊடகமாக பனை ஓலைகள் செயல்பட்டன.

5 கோடி பனை மரங்கள்
தமிழகத்தில் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. 3 லட்சம் குடும்பங்கள் பனை இலை, நார் கொண்டு கூடை பின்னுதல், பாய் முடைதல், கயிறு திரித்தல் போன்ற தொழில்களை சார்ந்துள்ளன. 11 ஆயிரம் பனை தொழிலாளர்கள் நுங்கு, பதனீர் இறக்கும் பணிகளை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். எனவே பனை சாகுபடியை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.

75 சதவீத மானியம்
இந்த இயக்கத்துக்கு வலுசேர்க்கும் வகையில் சபாநாயகர் தனது சொந்த முயற்சியில் 1 லட்சம் பனை விதைகளை வழங்கினார். எதிர்வரும் 2022-2023ல் 10 லட்சம் விதைகள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க, பனைமரம் ஏறும் இயந்திரங்கள், பனை வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், உபகரணங்கள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

பயிற்சி
பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சி, அதற்கான உபகரணங்கள் 209 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதுதவிர 100 பெண்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு பனை ஓலை பொருட்கள் தயாரிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மூலப்பொருட்கள் வழங்கி தயாரிக்கப்படும் இந்த பொருட்கள் மாநில, மாவட்ட சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். தொடர்ந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். இத்திட்டம் 2.65 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

விருது வழங்கப்படும்
சிறந்த பனைஏறும் எந்திரம் கண்டுபிடிப்புக்கு விருது வழங்கப்படும். 2022-2023ல் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 25 லட்சம் பனைவிதைகள் விதைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications