சோளம் வித்த காசு ரூ.77 லட்சம்? அரியலூர் ரயிலில் 500 ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய இளைஞர்! ஹவாலா பணமா?
சென்னை: அரியலூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூபாய் 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோளம் விற்ற பணத்தை கொண்டு வருவதாக அவர் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். வருமான வரித்துறையினர் இந்தப் பணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 1) அதிகாலை 1.30 மணிக்கு அரியலூர் வந்தடைந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கிச் சென்ற நிலையில், ரயில் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து அரியலூரில் இறங்கிய பயணி ஒருவர், துணிக்கடைகளில் வழங்கப்படும் கட்டைப்பையுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுள்ளார். அவரிடம் அரியலூர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவரது பையை வாங்கி சோதனை செய்ததில் அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 77 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூபாய் 77 லட்சம் அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளன.
பிடிபட்ட பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த வினோத் குமார், சோளம் விற்ற பணத்தை எடுத்து வருவதாக போலீசார் நடத்திய விசாரணையில் கூறியுள்ளார். ஆனால், எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து, அரியலூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும், வருமான வரித்துறைக்கும் தகவல் அளித்தனர். காலை அரியலூர் ரயில்வே காவல்நிலையம் வந்த வருமான வரித்துறை டிஎஸ்பி சுவேதா தலைமையிலான போலீஸார், வினோத்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் சரிவர பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் எடுத்து வந்தது ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications