10th ரிசல்ட்..தமிழில் வெறும் 8 பேர் தான் செண்டம்..கணக்கு பாடத்தில் எத்தனை பேர் 100க்கு 100 தெரியுமா?
சென்னை : 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் தமிழில் 8 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20ஆயிரத்து 691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்தனர்.

தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது. பின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
அதன்படி தேர்ச்சி சதவீதமானது கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. பாடவாரியாக தமிழில் 8 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20ஆயிரத்து 691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களில் 96.85 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆங்கிலத்தில் 91.15 சதவீதம், கணிதத்தில் 96.78 சதவீதம், அறிவியலில் 96.72 சதவீதம், சமூக அறிவியல் 9574 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 30,646 மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். பாடவாரியாக பார்க்கும் பொழுது தமிழில் 8 மாணவர்களும், ஆங்கிலத்தில் 415 மாணவர்களும். கணிதத்தில் 20691 மாணவர்களும், அறிவியலில் 5104 மாணவர்களும், சமூக அறிவியலில் 4428 மாணவர்களும் 100% மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். தமிழில் வெறும் 8 மாணவர்கள் மட்டுமே 100% மதிப்பெண்கள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கணிதத்தில் அதிகபட்சமாக 20691 மாணவர்கள் 100% மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை மொத்தம் 13 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளிகள் எழுதியிருக்கும் நிலையில் அவர்களில் 12,491 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் 92.45 சதவீதமாக இருக்கிறது.
இதே போல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 260 சிறைவாசிகள் எழுதிய நிலையில் அவர்களின் 228 பேர் தேர்ச்சி பெற்று சதவீதம் 87.69% ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications