2 வாரங்களில் மட்டுமே 89 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.. அதிரடி காட்டிய சென்னை போலீசார்!
சென்னை: சென்னை நகரில் கடந்த 2 வாரங்களில் 89 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 முதல் மே 26 ஆம் தேதி வரை மொத்தம் 585 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 286 பேர், திருட்டு, வழிப்பறி, பண மோசடி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்ற வழக்குகள் என மொத்த 585 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் மட்டும் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 89 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 89 பேர், கடந்த 14 நாட்களில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சட்ட விரோதமாக மது தயாரிப்பது, விற்பனை செய்வது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் காரியங்களைச் செய்வது, வன்முறையைத் தூண்டுவது, கடத்தல் காரியங்களில் ஈடுபடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற கடுமையான குற்றங்கள் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கடுமையான தண்டனைகளை வழங்கவும் குண்டர் தடுப்புச் சட்டம் 1982ல் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது.
கடுமையான குற்றங்கள் எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவைச் சேர்ந்தவர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும், ஊரகப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.
இந்த சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும். அவரிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை, அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்படாது. அவர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்தால், முன்கூட்டியே விடுவிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவர், தன் மீது குற்றமில்லை என்று நிரூபிக்க விரும்பினால் கைதானவர் சார்பில் வழக்கறிஞர் வாதிட இயலாது. அவர் சார்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான், முறையீட்டு குழுவைத்தான் அணுக வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications