90 சீட் + முதல்வர் பதவி.. தவெக உடன் பேரமா? ஆதவ் அர்ஜுனா யாருனே தெரியாது.. நயினார் நாகேந்திரன்
சென்னை: விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், கூட்டணி பேரம் பேசியதாக கூறும் ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். முன்னதாக ஆதவ் அர்ஜுனா 90 தொகுதிகள் + இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி கொடுப்பதாக பேரம் பேசியதாக கூறியிருந்தார்.
விஜய்யின் தவெகவை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிரமாக முயற்சித்ததாகவும், குறிப்பாக அந்த கட்சிக்கு 80 தொகுதிகள் + துணை முதல்வர் பதவி வரை வழங்க இருந்ததாகவும் தகவல் பரவியது.

80 தொகுதிகள் + துணை முதல்வர் பதவி
முதலில் விஜய்யிடம் 45 தொகுதிகள் + துணை முதல்வர் பதவி என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் இதற்கு தவெக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. பிறகு விஜய்க்கு 80 சீட் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்க பாஜக முன்வந்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் விஜய் தரப்பு இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் இதனால் இந்த கூட்டணி அமையாமல் போனதாகவும் கூறப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான தகவல் பரவி வந்த நிலையில் தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், இந்த தகவலை முற்றிலுமாக மறுத்தார். அதிமுக, பாஜக என எந்த கட்சிகளுடனும் தவெக பேச்சுவார்த்தை நடத்தவில்லை, சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்து இருந்தார்.
பல ஆஃபர் கொடுத்ததாக ஆதவ் பேச்சு
இதேபோல் எடப்பாடி பழனிசாமியும் இந்த தகவலை மறுத்து இருந்தார். இதற்கிடையே தான் சென்னை கொளத்தூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, கூட்டணி பேரம் நடத்தியதாக கூறினார். ஆதவ் அர்ஜுனா பேசும்போது, தமிழக வெற்றிக் கழகம் மட்டும் தான் கொள்கை எதிரி என்று பாஜகவை கூறியது. திமுக சொல்லியிருக்கிறதா.. எப்போதும் கூற மாட்டார்கள்..
234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் துணிவு எங்களுக்கு இருக்கிறது. மக்கள் எங்க பக்கம் இருக்காங்க. எந்த அழுத்தமும் கிடையாது. எந்த அழுத்தத்தையும் நாங்க எதிர்கொள்வோம். வெறும் பதவிக்காக நாம் வரவில்லை.. எல்லாரும் சொல்றாங்களே, நம்ம அண்ணனுக்கு பல்வேறு ஆஃபர்கள் கொடுத்தாங்க.. 50/50.. முதல்வர் பதவியில் இரண்டரை ஆண்டுகள் என பல ஆஃபர்களை கொடுத்தாங்க..
நயினார் நாகேந்திரன் மறுப்பு
90 தொகுதிகளில் நீங்க.. நாங்க 90 தொகுதிகளில்.. நீங்க இரண்டரை ஆண்டு முதல்வர்.. நாங்க இரண்டரை ஆண்டு முதல்வர்.. என எல்லா ஆஃபர்களும் கொடுத்தாங்க.. ஆனால் எங்க தலைவர், ஆஃபர் எல்லாம் வேண்டாம்.. எங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் முக்கியம். மதசார்ப்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறினார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், கூட்டணி பேரம் பேசியதாக கூறும் ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது எனவும் கூறியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது
நயினார் நாகேந்திரன் கூறியதாவது:- "யாரோடும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பாஜக தலைவர் என்ற முறையில் நான் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தவெக தரப்பில் அவர்களும் எங்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆனால் தேவையில்லாமல் ஒரு பிம்பம் பரப்பப்படுகிறது" என்றார்.
அப்போது ஆதவ் அர்ஜுனா, இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி, 90 தொகுதிகள் என பேரம் பேசியதாக கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், நீங்கள் கூறும் நபர் யார் என்றே தெரியாது" என பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications