லட்சத்தில் ஒருவருக்கு வரும் நோய்.. கண், காது, மூக்கில் வழியும் ரத்தம்.. தவிப்பில் 12 வயது சிறுவன்
12 வயது சிறுவன் விநோத நோயால் பாதிக்கப்பட்டு வருகிறான்.
சென்னை: கண், மூக்கு, காது என்று ரத்தமாக வழிந்து கொண்டிருக்கிறது அந்த சிறுவனுக்கு!! வாயை திறக்காமலேயே ரத்தம் கொட்டுகிறது என்பதால் சாப்பிடக் கூட முடியாமல் தவித்து கிடக்கிறான் 12 வயது சிறுவன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் நம்பித்தான் ஆக வேண்டும்! விநோத நோயால் பீடிக்கப்பட்டுள்ள இந்த சிறுவன் ராஜபாளையம் அருகே சட்டிகிணறு என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். மகாலட்சுமி - ராஜேந்திரன் தம்பதியின் மகன். மிகவும் ஏழ்மையான பின்னணியை சேர்ந்த குடும்பம் இது. ராஜேந்திரனுக்கு தொழில் விவசாயம்தான். குடும்பத்தை காப்பாற்ற மகாலட்சுமியும் மில் வேலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இவர்களின் மகன்தான் அபிஷேக்.

ரத்தம் இல்லை
12 வயதான அபிஷேக் பிறந்ததிலிருந்து நல்லாதான் இருந்தான். ஆனால் நாளடைவில் அவனிடம் ஒரு சோர்வு தெரிந்தது. எப்பவுமே களைத்து காணப்பட்டான். அதனால் அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டுபோனார்கள். அபிஷேக்கை பரிசோதித்த டாக்டர்களும் உடம்பில் ரத்தம் குறைவாக இருக்கிறது, அதனால் நல்ல சத்தான சாப்பாட்டை கொடுங்கள் என்று சொன்னார்கள். அதனால் தினமும் அபிஷேக்கிற்கு வலுவான ஆகாரத்தை கொடுக்க ஆரம்பித்தனர்.

விநோத நோய்
ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு விதி விளையாட தொடங்கியது. அபிஷேக் மயங்கி விழுதான், உடம்பில் வலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் வந்து சேர்ந்தன. விவரம் அறியாத பெற்றோர்கள் ஆசையாக வளர்த்த மகனின் நிலை அறிந்து பதறி போனார்கள். பெரிய பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். பெற்றோர் வாயில் நுழையாத எத்தனையோ டெஸ்ட் எடுத்து பார்த்தபின்புதான் தெரிந்தது, அபிஷேக் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு விநோத நோயால். இந்த நோய் எத்தனையோ லட்சக்கணக்கானோரில் ஒருவருக்குத்தான் வரும். இதன் பெயர் Aplastic Anemia என்பது.

ரத்தம் வெளியேறும்
இதன் பாதிப்பு என்னவென்றால், உடலில் ரத்தத்தில் உள்ள செல்கள் உற்பத்தியாகாமல் நின்றுவிடும். இருக்கும் செல்களும் குறிப்பிட்ட நாள்கள் முதல் ஒருசில மாதங்கள் வரைதான் உயிரோடு இருக்கும். பிறகு அந்த செல்கள் இறந்துவிடும். மேலும் புதிய செல்களும் உற்பத்தி ஆகாது. இறந்துவிட்ட செல்கள் உடலிலேயே தங்கிவிடும். தங்கிவிட்ட செல்கள் விஷத்தன்மையாகிவிடும். விஷத்தன்மை ஆகிவிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் வெகுவாக குறைய தொடங்கும். எதிர்ப்பு சக்திகள் குறைய குறைய உடல் உபாதைகள் விரைவாக தலைதூக்கும். அப்படிப்பட்ட உடல் உபாதைகளில் முதன்மையானது, மூச்சுத் திணறல்தான். இரண்டாவது ரத்தம் உறையும் தன்மையை இழந்துவிடும். ரத்தம் உறையாத காரணத்தினால், கண், காது, மூக்கு, வழியாக ரத்தம் வெளியேற ஆரம்பிக்கும். இப்படித்தான் சிறுவனுக்கு ரத்தம் வெளியேறி கொண்டிருக்கிறது.

மாற்று அறுவை சிகிச்சை
இதற்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சிஎம்சி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி சிகிச்சை செய்தால் ரத்தத்தில் மீண்டும் செல் உற்பத்தி ஆக தொடங்கி, ஓரளவு எல்லா குறைகளும் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இதற்காக குறைந்தது 25 லட்சம் ரூபாய் செலவாகிறது என்றும் கூறப்படுகிறது. விவசாயத்தை நம்பி மட்டும் வாழும் இவர்களால் இவ்வளவு தொகையை எங்கிருந்து புரட்டுவது என தெரியாமலும், மகன் படும் அவஸ்தையை பார்க்க சகிக்க முடியாமலும் அழுது புலம்புகிறார்கள்... மகனின் உயிரை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று தவித்து வருகிறார்கள்.

ஒன் இந்தியா தமிழ்
தற்போது அபிஷேக்கிற்கு ஒருநாளைக்கு 4 யூனிட் ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு சீக்கிரம் ஆபரேஷன் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு சிறுவனுக்கு நல்லது என்று தெரிவித்து விட்டதால், பெற்றோர் அபிஷேக்கை காப்பாற்ற உதவி கரம் நீட்டி உள்ளனர். "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக எங்களிடம் பெற்றோர் பேசினார்கள்.

வாசகர்கள் உதவலாமே
அப்போது அவர்கள் பேசும்போது "தினமும் எங்கள் கண்முன்னாலேயே இப்படி ரத்தம் வழிந்து வருவதை பார்க்க முடியவில்லை. என் பிள்ளையால் சாப்பிட கூட முடியாமல் போய்விட்டது. ஆஸ்பத்திரிக்கு எதிரிலேயே ஒரு அறை எடுத்துதான் தங்கி இருக்கிறோம். எப்போதெல்லாம் ரத்தம் கொட்டுகிறதோ உடனே ஆஸ்பத்திரிக்குள் அழைத்து சென்று ரத்தம் ஏற்றிவிடுகிறோம். இது ஒரு புதுவகையான நோய் என்று சொல்கிறார்கள், ஆபரேஷனுக்கு அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை. என் மகனை காப்பாற்ற யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என்று கண்ணீர் வடித்தனர்."
வாசகர்கள் உதவலாமே
R.RAJENDRAN
ACCOUNT NO: 194201000019517
IFSC: IOBA0001942
INDIAN OVERSEAS BANK
CHATRAPATTI
CONTACT NUMBER:9488394432












Click it and Unblock the Notifications