சென்னையே நடுங்கிப்போச்சு! உடல் முழுக்க சிகரெட் சூடு.. 16 வயது சிறுமியை சித்ரவதை செய்து கொன்ற தம்பதி
சென்னை: சென்னை அமைந்தகரை பகுதியில் வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டிருப்பதும், அடித்து தாக்கப்பட்டிருந்த காயங்களும் இருந்தது. இந்த நிலையில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உள்பட 3 பேர் தான் சிறுமியை அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. போலீசார் கணவன் - மனைவி இருரையும் கைது செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரை மேத்தாநகர் சதாசிவம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ். இவரது மனைவி நாபியா. இவர்களது வீட்டில் தஞ்சாவூரை சேர்ந்த 16 வயது சிறுமி பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். ஓராண்டுக்கு மேலாக வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளி அன்றும் சிறுமி அவரது வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவரது வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டில் பணிபுரிந்த சிறுமியை காணவில்லை என்று போலீஸ் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் போலீசார் அந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். இதில் வீட்டின் கழிவறையில் மர்ம முறையில் சிறுமி பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு தப்பி ஓடியிருந்த கணவன் மனைவி இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கழிவறையில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்துவிட்டதாக கூறினர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, கணவன் மனைவி மற்றும் அவர்களது நண்பர் ஆகிய 3 பேரும் சேர்ந்து தான் சிறுமியை சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
தீபாவளியன்று சிறுமி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தினர். சிகரெட்டால் சூடு வைத்துள்ளனர். மிக கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் இவர்களது நண்பர் லோகேஷ் என்பவரும் சேர்ந்து சிறுமியை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் பயந்து போன தம்பதியினர் சிறுமியை கழிவறைக்கு தூக்கி சென்று அங்கே போட்டுவிட்டு கதவை மூடினர். மேலும் பயந்து போய் வீடு முழுவதும் ஊதுபத்தியினை கொளுத்தி வைத்துவிட்டு உறவினரின் வீட்டுக்கு தப்பி சென்றுவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து கணவன் - மனைவி இருவரையும் கைது செய்தனர். சிறுமியின் உடலிலும் சிகரெட்டால் சூடு வைத்த தடயம் மற்றும் கொடூரமாக தாக்கப்பட்ட காயங்கள் இருந்தது தெரியவந்தது.
தம்பதியுடன் சேர்ந்து தாக்கிய லோகேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். வீட்டில் பணி செய்து வந்த சிறுமியை வீட்டின் உரிமையாளரே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications