சென்னை கோயம்பேட்டில் பசுமை பூங்கா.. யோகா மையம், ஸ்கேட்டிங், ஜிம் என அடியோடு மாறிய இடம்
சென்னை: கோயம்பேடு உள்வட்ட சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் 3.59 ஏக்கர் பரப்பளவில் ரூ.8.63 கோடி செலவில் எழில் சூழ்ந்த பசுமை பூங்கா அமைக்கும் பணியில் சி.எம்.டி.ஏ. ஈடுபட்டுள்ளது. இந்த பசுமை பூங்காவில் சுற்றுப்புற சூழலை பாதுகாத்து காற்றின் தன்மையை பாதுகாக்கும் வகையில் மரங்கள், செடிகள் நடப்பட்டிருக்கின்றன. யோகா மையம், ஜிம், நடைபயிற்சி பாதையுடன் சென்னை கோயம்பேட்டில் பசுமை பூங்கா மும்முரமாக உருவாகி வருகிறது. இந்த பூங்காவை மே மாதம் முதல் வாரத்தில் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது
சென்னையில் கடந்த ஆண்டு வரை மிக முக்கியமான பேருந்து முனையமாக இருந்த கோயம்பேடு, தற்போது பொலிவிழந்து வருகிறது. கிளாம்பாக்கத்துடன் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், வெளியூர் செல்பவர்கள் கோயம்படு வருவது குறைந்துவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்து விட்டதாக நினைத்தால், அதுதான் இல்லை.. ஏனெனில் வாகனங்கள் எண்ணிக்கை நகருக்குள் மிக அதிகமாக இருப்பதால் நெரிசல் கொஞ்சமும் குறையவில்லை..

இது ஒருபுறம் எனில் கோயம்பேட்டில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு மிக்க பகுதியாகவும் மாறி வந்தது. கோயம்பேடு மேம்பாலம் கீழே உள்ள ரவுண்டானா பகுதியில் கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு கிடந்தன. பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கழிவுகளும் கிடந்தன. இதையடுத்து அந்த பகுதியை மீட்டு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து அந்த பகுதியை சீரமைத்து பசுமை பூங்காவாக்கும் நடவடிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஈடுபட்டது. சி.எம்.டி.ஏ. உடன் குடிநீர் வாரியமும், பெருநகர சென்னை மாநகராட்சியும் கைகோர்த்து இந்த பகுதியை சீர் செய்தன.
அதன்படி, கோயம்பேடு உள்வட்ட சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் 3.59 ஏக்கர் பரப்பளவில் ரூ.8.63 கோடி செலவில் எழில் சூழ்ந்த பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பசுமை பூங்காவில் சுற்றுப்புற சூழலை பாதுகாத்து காற்றின் தன்மையை பாதுகாக்கும் வகையில் மரங்கள், செடிகள் அதிக அளவில் நடப்பட்டுள்ளன. உட்கார்ந்து செல்வதற்காக இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
50 பேர் வரை அமரும் அரங்கம், சிறிய குளம், யோகா மையம், ஸ்கேட்டிங் ஏரியா, ஜிம், குழந்தைகள் விளையாடும் இடம், 8 வடிவ நடை பாதை, 2 கி.மீ. தூரத்துக்கான நடைப்பயிற்சி பாதை, 2 கடைகள், கழிப்பறை வசதி, வாகனம் நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகளுடன் கோயம்பேடு பசுமை பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது.
சிஎம்டிஏவின் இந்த முயற்சி காரணமாக கோயம்பேடு மேம்பாலத்தின் கீழே உள்ள பகுதி அற்புதமாக மாறி உள்ளது. முன்பெல்லாம் மாலை நேரத்தில் இந்த பகுதிகளை கடக்கவே பயமாக இருக்கும். பசுமை பூங்கா அமைக்கப்பட்டதன் காரணமாக காற்றுவாங்கவும் சந்தோஷமாக நடைபயணம் மேற்கொள்ளவும் மக்கள் அங்கு வர ஆரம்பித்துள்ளனர். சென்னையின் புதிய பொலிவான இடமாக உருமாறி வரும் இந்த பசுமை பூங்கா வருகிற மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications