வினையாக மாறி ஸ்மார்ட்போன்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் ஷாக்
சென்னை: சென்னை அம்பத்தூரில் படிக்காமல் கேம் விளையாடிதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்மார்ட்போன்களை நல்ல விஷயங்களுக்காக எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அதே அளவு கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்த முடியும். உலகத்தை பார்க்கும் கண்ணாடியாக மாறியுள்ள ஸ்மார்ட்போன்கள் மக்களை அடிமையாக்கி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் கொரோனா தொற்று பரவி வருவதன் காரணமாக ஆன்லைன் கல்வி இப்போது கட்டாயமாகி உள்ளது. இதனால் இதுவரை ஸ்மார்ட்போனை தொடாதவர்கள் கூட இப்போது வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேமிற்கு அடிமை
அப்படி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் செல்போனில் கேமிற்கு அடிமையாகிவிடுகின்றனர். அத்துடன் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா என எந்த நேரமும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். இதை பெற்றோர்கள் கண்டித்தால் மாணவர்கள் கோபத்திலும் , விரக்தியிலும் திடீரென விபரீத முடிவெடுக்கிறார்கள்.

கல்லூரி மாணவி
அப்படித்தான் சென்னை அம்பத்தூரில் கல்லூரி மாணவி விபரீதமாக முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்டார். சென்னை அம்பத்தூர், வரதராஜபுரம் பழைய எம்.டி.எச் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஸ்ரீதர். இவரது மகள் பத்மாவதி (18). இவர், அண்ணாநகர் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

வீட்டில் தற்கொலை
வருகின்ற 24ந்தேதி பத்மாவதிக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. ஆனால் நேற்று காலை பத்மாவதி படிக்காமல், போனில் விளையாடி உள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அவரை கண்டித்து உள்ளனர். இதில் மனமுடைந்த பத்மாவதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு அம்பத்தூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ் வழக்கு
பின்னர், அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பத்மாவதி வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். இதை பார்த்த பெற்றோர் சடலத்தை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications