படியேறவே மாட்டேன்! வீம்பாக இருந்த "டாப்" அமைச்சர்.. ஸ்டாலினை ரயிலில் பார்த்து.. ஆஹா மொத்தமா மாறுதே!
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை இன்னும் 3 நாட்களில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மூத்த அமைச்சர் ஒருவரின் துறையும் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் அமைச்சரவை மாற்றப்பட போவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவை அமைச்சராக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்தன.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்ற செய்திகள் மீண்டும் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் தீவிரம் அடைந்துள்ளன. இந்த முறை உறுதியாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று கோட்டை தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேதி குறிச்சாச்சு
அமைச்சரவை மாற்றத்திற்கு தேதி குறிக்கப்பட்டுவிட்டதாகவும் ஆளும் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இந்த மாதம் 14ம் தேதி அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம் திமுகவின் ஒரு வருட ஆட்சி முடிந்ததும், அந்த பேச்சுக்கள் மீண்டும் தீவிரம் அடைந்தன. ஆனால் அப்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அமைச்சரவையை மாற்றலாம் என்ற முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் பெறப்போகும் அமைச்சரவை பதவிகள் குறித்த குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை.

மாற்றப்படும் அமைச்சர்கள்
முக்கியமாக மூத்த - செயல்படாத அமைச்சர்கள் சிலரின் (2 பேரின்) பதவி பறிக்கப்படலாம் என்று செய்திகள் வேகமாக பரவின பெரும்பாலும் 7 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் என்கிறார்கள். சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தேவையின்றி பேசிய அமைச்சர் ஒருவரை பெரிய துறையில் இருந்து சிறிய துறைக்கு மாற்றிவிடலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவரை மாற்றம் செய்துவிட்டு அவரிடம் இருக்கும் துறையை அப்செட்டில் இருக்கும் ஒரு அமைச்சரிடம் கொடுக்கும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன துறை கொடுக்கப்படும் என்பது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.

மூத்த அமைச்சர் கேட்டார்
இந்த நிலையில்தான் கடந்த முறை அமைச்சரவை உருவாக்கத்தின் போது அப்செட்டில் இருந்த அமைச்சர் ஒருவருக்கான துறை மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அந்த அமைச்சர் ஐ பெரியசாமி. அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற ஐ பெரியசாமி எம்எல்ஏ அமைச்சரான போது பெரிய துறை கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்போது பெரிய துறை வழங்கப்படவில்லை. அவருக்கு கூட்டுறவு துறை வழங்கப்பட்டது. ஆனால் அந்த அமைச்சர் வேறு ஒரு பெரிய துறையை விரும்பியதாக கூறப்பட்டது. இதனால் ஐ பெரியசாமி அமைச்சர்களுக்கான வீட்டில் குடியேறாமல் முரண்டு பிடித்துக்கொண்டு இருந்தார்.

சபதம்
அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டில் குடியேற மாட்டேன் என்று ஹோட்டலிலும், சொந்த வீட்டிலும் தங்கி வருகிறராம். தனக்கு அமைச்சரவையில் மாற்றம் வரும் வரை இதுதான் நிலைப்பாடு என்ற சபதத்தில் இருக்கிறாராம் அந்த சீனியர் அமைச்சர். நான் சீனியர் எம்எல்ஏ.. எனக்கு ரொம்ப பெரிய துறை வேண்டாம். அட்லீஸ்ட் கொஞ்சமாவது பிரபலமான துறை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இப்படி சின்ன துறையை கொடுத்துவிட்டார்களே என்று அவர் புலம்பியதாக உறுதி இல்லாத செய்திகள் வந்தன. ஆனால் முதல்வர் மீது இவருக்கு இதனால் மனவருத்தம் எதுவும் இல்லை. தனக்கான பதவி தனக்கு கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறாராம். இந்த நிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தென்காசிக்கு ரயிலில் சென்ற போது, அதே ரயிலில் ஐ பெரியசாமி சென்று இருக்கிறார். தனது மன வருத்தத்தை அதில் தெரிவித்து இருக்கிறாராம்.

மாற்றம்
இடையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போதே ஐ பெரியசாமிக்கு போக்குவரத்து துறை வேண்டுமா என்று கேட்டு இருக்கிறார்களாம். ஆனால் அவரோ எனக்கு அந்த துறை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். வேறு சில காரணங்களுக்காக இந்த குறிப்பிட்ட துறையை அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி முக்கியமாக அமைச்சர்களான பிடிஆர், சேகர் பாபு, அன்பில் மகேஷ், ஆகியோர் சிறப்பாக செயல்படுவதால் அவர்களின் துறைகள் மாற்றப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் ஐ பெரியசாமி உள்ளிட்டோர் வேறு துறைகளை எதிர்பார்ப்பதால் அவர்களுக்கு வேறு துறைகள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

என்ன துறை
அதன்படி விளையாட்டு துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் மெய்யநாதனுக்கு சுற்றுலாத்துறை மட்டும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஐ பெரியசாமிக்கு அவர் எதிர்பார்த்தபடி ஊரக உள்ளாட்சி துறையை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முக்கியமான துறை என்பதால் ஐ பெரியசாமி இதை பெற்றுக்கொண்டு திருப்தியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் 3 நாட்களுக்குள் முழு அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications