விஜயகாந்துக்கு அஞ்சலி! கூட்டத்தில் சிக்கிய நடிகர் விஜய்.. கன்னத்தை கிள்ளி இம்சை செய்த பச்சை சட்டை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறப்புக்கு வந்த நடிகர் விஜய் கூட்டத்தில் சிக்கிய போது அவருக்கு ரசிகர் ஒருவர் தொடர்ந்து முத்தம் கொடுத்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய உடலுக்கு கருப்பு கண்ணாடி, பட்டாடை, கழுத்தில் கட்சி துண்டு, கையில் கட்சி சின்னம் பதித்த மோதிரம் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார், கட்சி அலுவலகம் உள்ள கோயம்பேடு மிகவும் குறுகலான இடம் என்பதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் தொண்டர்களுக்கு தனிபாதை, பிரபலங்களுக்கு தனி பாதை என விடமுடியவில்லை.
இரு தரப்பினரும் ஒரே பாதையில் அழைத்து வரப்பட்டனர். அப்போது விஜய் எப்படியோ தொண்டர்களுக்கு மத்தியில் நீந்தி விஜயகாந்த் உடல் இருக்கும் பகுதிக்கு வந்தார். அங்கு அவர் இரு கைகளையும் கண்ணாடி பேழையில் வைத்தபடியே விஜயகாந்தின் முகத்தை பார்த்தார். வரும் போதே இறுக்கமாக வந்த அவர், விஜயகாந்தின் முகத்தை பார்த்ததுமே கீழே குனிந்து அழுதார்.
உடனே பிரேமலதாவை பார்த்ததும் கண்ணீர் சிந்தினார். இதையடுத்து மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோருக்கு ஆறுதலை சொல்லிவிட்ட விஜய் கீழே இறங்கிய போது என்ன தோன்றியதோ தெரியவில்லை. உடனே திரும்பி 10 வினாடிகள் விஜயகாந்த் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேற அவரை பாதுகாப்பாக அழைத்து செல்லுமாறு பிரேமலதா தெரிவித்தார். அப்போது அவர் கூட்ட நெரிசலில் சிக்கினார். கிட்டதட்ட அவரை நசுக்கும் அளவுக்கு கூட்டம் இருந்தது. அப்போது பச்சை சட்டை அணிந்திருந்த ஒரு நபர் விஜய்யின் கைகள், தோள் பட்டை, தலை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து முத்தமிட்டவாறே இருந்தார். அது போல் கன்னத்திலும் கிள்ளி இம்சை செய்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அன்பு இருக்கலாம், அதற்காக இப்படியா, அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் நடிகர், நடிகைகளுடன் செல்பி எடுக்க முந்துவது, இது போன்ற தொட்டு பார்ப்பது, முத்தம் கொடுப்பது, கை கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால்தான் பிரபலங்கள் இது போன்ற இடங்களுக்கு வரத் தயங்குகிறார்கள் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications