திமுக கூட்டணியில் கட்சிகள் அதிகரிக்க வாய்ப்பு.. இன்று ‘திருப்புமுனை’ நாள்.. கி.வீரமணி பேட்டி!

பாஜக ஆட்சியை எதிர்ப்பதற்கான முன்னோட்டம் இன்று நடக்கிறது எனக் கூறியுள்ளார் கி.வீரமணி.

Subscribe to Oneindia Tamil

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதைவிட ஜனநாயகத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் அதிகரிக்கலாமே தவிர குறையாது. மற்ற கூட்டணியில் சில கட்சிகள் காணாமல் போகலாம்" என்றும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஆண்டு 70 காணும் சமூகநீதி சரித்திர நாயகர் முதலமைச்சரை தாய்க்கழகம் உச்சிமோந்து வாழ்த்தி மகிழ்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி வாழ்த்து

கி.வீரமணி வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் இன்று காலை மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கி.வீரமணி, "தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதல்வர் சமூக நீதியின் சரித்திர நாயகன் ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று. மகளிர் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த ஆட்சியாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

வெறும் அரசியல் கூட்டணி அல்ல

வெறும் அரசியல் கூட்டணி அல்ல

இது தமிழ்நாட்டோடு நின்றுவிடாமல் திராவிட மாடல் நாடு முழுவதும் பரவ வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்சியை எதிர்ப்பதற்கான முன்னோட்டமாக இன்று மாலை முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் ஒன்றிணைகின்றனர். மற்ற இடங்களில் தேர்தல் நேரங்களில் அரசியல் கூட்டணியாக மட்டுமே உள்ளது. திமுக கூட்டணி தேர்தலுக்காக இல்லாமல் கொள்கைகளுக்காகச் சேர்ந்த கூட்டணி என்பதால் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது.

திருப்புமுனை நாள்

திருப்புமுனை நாள்

சமூக நீதி, சுயமரியாதை, மதச்சார்பின்மையைப் பின்பற்றும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் தமிழ்நாட்டைத் தாண்டி நாடாளுமன்ற தேர்தலில் பயன்பட வேண்டும். முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதை விட ஜனநாயகத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று. திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் அதிகரிக்கலாமே தவிர குறையாது. மற்ற கூட்டணி கட்சியில் சில கட்சிகள் காணாமல் போகலாம்" எனத் தெரிவித்தார்.

இரு முனை நோக்கி

இரு முனை நோக்கி

முன்னதாக ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வாழ்த்தறிக்கை வெளியிட்ட கி.வீரமணி, "'திராவிட மாடல்' என்று தமிழ்நாட்டில் நூறாண்டு ஆட்சியான திராவிடர் ஆட்சியின் நீட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி - ஒரு மகத்தான வரலாறு படைத்து 'அய்யிரண்டு திசைமுகத்தும்' அதன் புகழ் பரப்பும் ஆட்சியாக தகத்தகாய ஒளிவீச்சுடன் திகழுவதற்கு முழுமுதற்காரணம் இன்றைய முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆவார். இன்று அவர் எழுபதாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதுடன், தனது ஆளுமைத்திறனை அகிலமும் பாராட்டும் வண்ணம் புதியதோர் திருப்பத்தை அரசியலில் இருமுனை நோக்கி செலுத்துகிறார்! 1. ஓர் இலக்கு அடுத்த தலைமுறை 2. மறு இலக்கு 2024 மக்களவை பொதுத்தேர்தல்.

முத்தான விளைச்சல்

முத்தான விளைச்சல்


இந்திய அரசியலில் பாசிசத்தை வீழ்த்தி, பண்பட்ட ஜனநாயகத்தின் மாண்புகளையும் காப்பாற்றி - தற்போது சனாதனம் என்ற திணிப்பினை எதிர்த்து, திராவிடத் தத்துவம் என்ற 'அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதிக் கொடியை எவரும் எட்ட முடியாத உயரத்தில் பறக்கவிட தனது கடும் உழைப்பை நல்கி உறுதி, சூளுரை நாளாகக் கொண்டு, இளமை குன்றா இணையிலாத் தொண்டு செய்ய முந்துகிறார். 'திராவிட மாடல்' ஆட்சியும், அதன் சிதைக்க முடியா சிந்தனைக் கருவூலமும் தந்த முதிர்ச்சியின் முத்தான விளைச்சல்! சத்தான கொள்கை லட்சியத்தின் இலக்கு நோக்கிய இணையற்ற பயணம்!! அனைத்திந்திய தலைவர்கள் வருகை - பாராட்டு! அது மட்டுமா?

அறப்போர் உறுதிமொழி

அறப்போர் உறுதிமொழி

இந்த பிறந்த நாளில், அவரை வாழ்த்திட, திராவிடத் திருவிளக்கின் ஒளியை இந்தியா முழுவதும் பாய்ச்சிட, பல தலைவர்கள் - அனைத்திந்திய தலைவர்கள் இந்தத் திராவிட பூமிக்கு வருகிறார்கள். எதற்கு? அவரே அடக்கத்துடன் அருமையாகக் குறிப்பிடுகிறார், அவரது பிறந்த நாள் செய்தியில், "தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. தமிழ்நாடு அத்தகைய நிலையை அடைவதுடன், இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மைச் சிதையாமல், ஒருமைப்பாடு குலையாமல், மத நல்லிணக்கம் மிக்க ஜனநாயகம் தழைத்தோங்கும் நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கமாகும்" எனவே, பிறந்த நாள் வெறும் கொண்டாட்டம் அல்ல; கொள்கைப் பாதுகாப்பு அறப்போர் உறுதிமொழி!

 தனி மனிதர் அல்ல

தனி மனிதர் அல்ல

இதைத்தான் 'திராவிட மாடல்' ஆட்சியின் திறமைமிகு நம் முதலமைச்சர் உலகுக்கு உணர்த்திடும் உறுதி ஏற்று செயலாக்கும் ஆளுமை நோக்கி மக்களின் பேராதரவு என்ற புதுப்பொலிவுடனும், வலிமையுடனும் தனது 70 ஆம் ஆண்டுப் பயணத்தில், 50 ஆண்டு பொதுவாழ்க்கையின் தொண்டு - தொல்லைகளைத் தொய்வின்றி கொண்டு செலுத்த களத்திற்குள் நுழைகிறார். அவரது களம் விரிகிறது - அனைத்திந்தியாவிலேயே அறிவார்ந்த ஆளுமையின் காரணமாக - தொடர்ந்து புத்தம் புதிய பெரியார் என்ற பேராயுதக் கிடங்கில், அண்ணா, கருணாநிதி என்ற பட்டறையின் உதவியுடன் அவர் வென்றெடுப்பார் என்று வாழ்த்தும் கோடானு கோடி நெஞ்சங்களோடு திராவிடர் கழகமாம் தாய்க்கழமும் தன்னை இணைத்து, உச்சிமோந்து, வாழ்த்துவதில் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறது! அவர் தனி மனிதரல்ல! தளராத தன்னம்பிக்கையின் ஒளிவீசும் அறிவாயுதக் கிடங்கு! வாழ்க, வாழ்க பல்லாண்டு" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+