ஜெயக்குமாரை 5 நாள் விசாரிக்கனும்..அனுமதி கேட்ட போலீஸ்.. தேவையில்லை என தள்ளுபடி செய்த நீதிமன்றம்
சென்னை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி தண்டையார்பேட்டை காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை ராயபுரத்தில் 49ஆவது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர்.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் கள்ள ஓட்டுப் போட்டுவிட்டுத் தப்ப முயன்றதாகக் கூறி ஒருவரைப் பிடித்து அதிமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தாக்கியதாகப் புகார்
அப்போது முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் இதைத் தடுக்காமல் அதிமுகவினருடன் இணைந்து அவரை தாக்கியதாக திமுக தரப்பு குற்றஞ்சாட்டியது. மேலும் கள்ள ஓட்டு புகாரில் சிக்கிய அந்த திமுக பிரமுகரின் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக்கி இழுத்து சென்றனர் அதிமுகவினர். இந்தச் சூழலில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பல பிரிவுகளில் வழக்கு
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கலவரத்தில் ஈடுபடுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல், அவதூறாக பேசுதல், ஆயுதத்துடன் கொலை மிரட்டல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் 21ஆம் தேதி இரவு 8 மணியளவில் பட்டினப்பாக்கம் லித் கேஸ்டில் சாலையில் வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தண்டையார்பேட்டை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

அதிமுகவினர் முழக்கம்
தொடர்ந்து சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தண்டையார்பேட்டை காவல்துறையினர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது ஏராளமான அதிமுகவினர் நீதிமன்றத்தில் குவிந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்க என முழக்கமிட்டனர்.
Recommended Video

போலீசாரின் மனு தள்ளுபடி
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டரை தாக்கிய பதிவு செய்யப்பட்ட வழக்கில் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென தண்டையார்பேட்டை காவல் துறை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தபோது ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என கூறிய நீதிபதி நீதிமன்றத்தில் தண்டையார்பேட்டை காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications