இப்படியும் ஒரு துயரம்... மகனை பெற்ற அரசியல் அப்பாவுக்குத்தான் வலி தெரியும்!
சென்னை: மகனை பெற்ற அரசியல் அப்பாவுக்குத்தான் வலி என்னவென தெரியும் என்பதை தமிழக அரசியல் நிகழ்வுகள் அடுத்தடுத்து நிரூபித்து கொண்டே இருக்கின்றன.
எந்த கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் மகனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அரசியலில் ஒரு ஏற்றப் பாதையில் நிறுத்திவிட்டுதான் பெருமூச்சு விடுவதுதான் பொதுவான அப்பாக்களின் போராட்டம். தமிழகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் இதற்கு உதாரணம்.
திமுக பொருளாளர் துரைமுருகன் தன் மகன் கதிர் ஆனந்த் பெரும் தொழிலதிபராக, கல்வி அதிபராக இருந்தாலும் அவருக்கு அரசியலில் ஒரு எதிர்காலத்தை கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக எத்தனை எத்தனை போராட்டங்கள்.. எத்தனை ஆண்டுகால காத்திருப்புகள்..
இப்போதும் நெருப்பை மடியில் கட்டிக் கொண்டுதான் வேலூர் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் வலம் வருகிறார் துரைமுருகன். அப்படியான ஒரு மகனை லோக்சபா தேர்தலில் எம்பியாக்கிவிட்டார் ஒரு அரசியல் தந்தை.
வெறும் எம்.பி.யாக்கிவிட்டால் போதுமா... அடுத்த உயர்வு தமது காலத்திலேயே பெற்றுத் தந்துவிட வேண்டுமே என்பதற்காக பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அந்த தந்தை நடத்திய சந்திப்புகள்தான் எத்தனை எத்தனை!
ஒரு கட்டத்தில் தமது இருப்புக்கே கட்சியில் நெருக்கடி என்கிற நிலைக்கு வந்து நிற்கிறார். இப்போதும் அவர் அசரவில்லை... எனக்கு கட்சியில் இடம்பெற்றுத் தாருங்கள்... என் மகனை தங்கள் கட்சிக்கே தாரைவார்த்துவிடுகிறேன்.. நீங்களே அவனது எதிர்காலத்தை பார்த்து கொள்ளுங்கள் என்கிற லெவலுக்கு இறங்கிவிட்டாராம்.
உண்மைதான் மகனை பெற்ற அரசியல் அப்பாவுக்குத்தான் வலி தெரியும்!