அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பிரம்மாண்ட மைதானம்! வடசென்னையில் குத்துச்சண்டை விளையாட்டு வளாகம்!
சென்னை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வட சென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்திருக்கிறார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மேலும், முதல்வர் உரையின் விவரம் வருமாறு;

குத்துச்சண்டை
வட சென்னை பகுதியானது பல்வேறு விளையாட்டுத் திறமையாளர்களை ஊக்குவிப்பதில் புகழ் பெற்று விளங்கி வருகிறது. அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தக்கூடிய நோக்கில், வட சென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி) இங்கு கையுந்துப்பந்து (Volleyball), இறகுப்பந்து (Badminton), கூடைப்பந்து (Basket ball), குத்துச்சண்டை (Boxing), கபடி (Kabaddi) மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளோடு (Indoor Games) நவீன உடற்பயிற்சிக் கூடம் (Modern Gym) அமைக்கப்பட உள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி) தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தியத் தற்காப்புக் கலைகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய சிலம்பம் விளையாட்டினை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சிலம்ப வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடற்கரை ஒலிம்பிக்ஸ்
தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தமிழ்நாட்டில் விளையாட்டைச் சார்ந்த பொருளாதாரம் உருவாகவும், அதனை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை ஓபன் ATP டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்தவும், Beach Olympics எனப்படும் கடற்கரை ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுற்றுலாப் பயணிகள்
தமிழ்நாட்டில் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டுப் போட்டிகள் நடத்துவதன்மூலம் விளையாட்டுத் துறையில் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். இதனையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து, தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடையவும் வாய்ப்புகள் ஏற்படும்.

சதுரங்க விளையாட்டு
சதுரங்க விளையாட்டில் (Chess) இந்தியாவின் தலைநகராக விளங்கக்கூடிய வகையில் எப்போதுமே தமிழ்நாடு பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களைத் தமிழ்நாடு தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

உலக செஸ் ஒலிம்பியாட்
இந்தியாவில் விளையாட்டு உலகின் மணிமகுடமாக விளங்கக்கூடிய 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-7-2022 முதல் 10-8-2022 வரை தமிழ்நாட்டில் உலகமே வியக்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமாகத் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது. 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் உலகில் உள்ள 180 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் அதிலே பங்குபெறவிருக்கிறார்கள். 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கு இன்றே ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, அந்தப் பணிகளும் சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக வளர்ந்து சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications