சம்பவம் இருக்கு.. வங்கக்கடலில் உருவாகும் 'அசுரன்'! தேதி குறித்த வானிலை ஆய்வு மையம்!
சென்னை: வங்கக்கடலில் வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மேட்டூர் தவிர மற்ற அணைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. ஆனால் வடகிழக்கு பருவமழை தற்போது வரை 10 சதவிகிதம் குறைவாகதான் பெய்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இது வலுப்பெற்று 29ம் தேதி காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த 2 மணி நேரத்தை பொறுத்த அளவில், அதாவது மாலை 4 மணி வரை தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருப்பூர், கரூர், திண்டுக்கல் என 15 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
அதேபோல திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், புதுக்கோட்டை, நீலகிரி மற்றும் திருநெல்வேலி என 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்த அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications