ஆம்ஸ்ட்ராங் கொலை..திணறிய சென்னை! நினைவேந்தல் பேரணியில் திரண்ட பிரபலங்கள்! ‘அந்த’ கட்சியினர் மிஸ்ஸிங்!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரது மரணத்திற்கு நீதி வேண்டி சென்னையில் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இயக்குனர் பா.ரஞ்சித்தின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ், தீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேறு, சரணடைந்திருப்பவர்கள் வேறு என தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சனிக்கிழமையான இன்று 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறும் என இயக்குனர் பா.ரஞ்சித் அறிவித்தார். சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி, இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஆம்ஸ்ட்ராங் இறந்ததற்காக வீர வணக்கம் செலுத்துவது, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது விசிக மேடையில் மட்டும் தான் எனவும், பணம் கொடுத்து நடத்தும் எந்த நிகழ்வுகளிலும், பேரணிகளிலும் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சியினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திட்டமிட்டபடி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டலில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ், வில்லன் நடிகர் தீனா, தலித் கூட்டமைப்பினர், சமூக செயல்பாட்டாளர்கள், பல கட்சிகளின் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரமடா ஹோட்டல் அருகே தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்றது. தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டமும் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். இதற்காக எழும்பூரில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நினைவேந்தல் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்ளக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார், இதன் காரணமாக அந்த கட்சியினர் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications