கிளாம்பாக்கத்தில் இன்று முதல் வந்த புதிய வசதி.. இனி சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இன்று முதல் மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கேயே மாதம் 1000 ரூபாய் பாஸ் உள்பட பல்வேறு பயண சலுகை அட்டை பெறலாம்.
சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள், சென்னை கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 30ம் தேதி நேற்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையாக செயல்பட தொடங்கிவிட்டது.

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சை, சேலம், கோவை உள்பட சுமார் 100 நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கத்தில் தான் புறப்படுகின்றன. விழுப்புரம் கோட்டத்தில் செல்லும் பேருந்துகள் மட்டுமே தாம்பரம் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு விட்டு, கிளாம்பாக்கத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன.
பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு கட்டண பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த கட்டண பஸ்கள், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, புதிய பஸ் நிலையத்தின் முன் வாயிலில் இறக்கிவிடுகின்றன. பின்னர் அங்கிருக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்கிறது. இதற்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த பஸ்களில் எந்தவித பஸ் பாசும் செல்லாது .
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 1ம் தேதியான இன்று முதல் மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கேயே மாணவர்கள் சலுகை பயண சீட்டு அட்டை, மற்றும் மாதம் 1000 ரூபாய் பாஸ் உள்பட பயண சலுகை அட்டை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் எனில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க நேற்று டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications