சர்ச் சபையில் இஸ்லாமியப் பெண்! – மதங்களை மீறிய ஒரு மனிதநேயம்
சென்னை: மதங்களை மீறியதுதான் மனிதநேயம். அதைப் பலர் மறந்துபோகும் நேரத்தில் சிலர் அதற்கு மீண்டும் உயிர்கொடுக்கின்றனர். அப்படி ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு கோவை சி.எஸ்.ஐ தேவாலயத்தில் நடந்தேறியுள்ளது.
வழக்கம் போல ஞாயிற்றுக் கிழமை அன்று தேவாலயத்துக்கு வந்திருந்த கிறிஸ்துவர்கள் மத்தியில் திடீரென்று அழைக்கப்பட்டார் ஒரு இஸ்லாமியப் பெண்மணி. தேவாலயத்தில் இவருக்கு என்ன வேலை என்று கேட்கும்படி இருந்தது அவரது உடையலங்காரம்.
தலையை மூடிக் கொள்ளும்படி அவர், ஹிஜாப் அணிந்திருந்தார். தேவாலயத்தின் சபையின் மீது நின்றிருந்த ஃபாதர் சார்லஸ் சாம்ராஜ், சில நல்ல வார்த்தைகளைக் கூறி, இஸ்லாமிய பெண்மணியான ஷெஹானாஸ் பர்வீனை அறிமுகம் செய்து வைத்தார்.
மசூதி, தேவாலயம் முன் பெரியார் சிலை இருக்கே.. கோயிலே சரியான இடம்! அந்த வீரர் எங்கே? - சுப.வீ சுளீர்
பர்வீன் செய்த உதவிகள்
"அவர் தான் செய்த உதவிகளை எங்கேயும் சொல்லவேண்டாம் என்று கூறியிருந்தார். பிறர் அவரது நல்ல உள்ளத்தைப் புரிந்து கொள்வதற்காக இதைச் சொல்கிறேன். அவர் பழங்குடி மக்கள் வாழும் பகுதிக்கு சென்றிருந்தார். அங்கே ஒருவீட்டில் விளக்கு வசதிகூட இல்லை. அதைப் பார்த்த பர்வீன், சூரிய ஒளியில் மின்வசதியை அமைப்பதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டார்" என்று கூறிய போது அவை முழுக்க கர ஒலி பரவியது.
தேவாலயத்தில் பேச்சு
அனைவரையும் வியக்கச் செய்யும் படி தேவாலய சபையில் ஏறிய பர்வீன், "வறியவர்களுக்கு நாம் செய்யும் சேவை கடவுள் மீது நாம் வைத்துள்ள அன்பை நிரூபிக்க உண்மையான ஒரு வாய்ப்பாகும்" என்றார். மேலும் "எங்கள் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வெவ்வேறு விதமான நம்பிக்கைகளுக்கு மத்தியில் இந்த வகையான சைகை இப்போது நமக்குத் தேவை என நான் உண்மையாக நம்புகிறேன். அனைத்து மதங்களும் அன்பையும் மதநல்லிணக்கத்தையும்தான் வலியுறுத்துகின்றன" என்றார் பர்வீன்.
10,000 உடல்கள் அடக்கம்
இவர் தேவாலயத்தின் ஒரு பகுதியாக இயங்கும் 'ஜீவ சாந்தி அறக்கட்டளை'யுடன் இணைந்து இந்த சேவை செய்து வருகிறார். ஏறக்குறைய கொரோனா நோய் பரவலின் போது 10,000க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்துள்ளது இந்த அமைப்பு. "இந்தப் பணி, கொரோனாவிற்குபின் நின்றுவிடக் கூடாது. தொடர்ந்து செயல்படவேண்டும்" என்றார் பர்வீன்.
தடை! அதை உடை
பொதுவாக இஸ்லாமியப் பெண்களுக்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்களால் வீட்டைத் தாண்டி வந்து பொதுவெளியில் பொதுக் காரியங்களுக்காக இயங்க முடியாது என்ற குருட்டுத்தனமான வாதத்தை உடைத்தெறிந்திருக்கிறார் இந்த இஸ்லாமியப் பெண். இந்தச் சேவை அமைப்பில் பல்வேறு நபர்கள் மதத்தைக் கடந்து பொதுச் சேவை செய்து வருகின்றன. அவர்களில் ஒருவர்தான் பர்வீன்.
கட்டியணைத்த கிறிஸ்தவர்கள்
தனது பேச்சின் இறுதியில் இஸ்லாமியப் பெண்ணான பர்வீன், "ஒரு ஏழைக்கு இரக்கம் காட்டுகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்" என்ற வாசகத்தைப் பைபிளிலிருந்து மேற்கோள் காட்டினார். அதைக் கேட்ட அனைவரும் அவரை கட்டியணைத்து வாழ்த்தினர். மதத்தை தாண்டிய ஒரு மனிதநேய ஒளி அங்கே மெல்ல பரவியதை நம்மால் உணர முடிந்தது.