என் சாவுக்குக் காரணம்... கஜாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் பரபரப்பு வீடியோ!
என் சாவுக்கு காரணம் என்று கூறி கஜாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: என் சாவுக்கு காரணம் என்று கூறி கஜா புயலில் பாதிக்கப்பட்ட இளைஞர் இனியவன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் (தி.மு.க) ராஜேந்திரனின் மகன், இனியவன். இதழியல் படித்த இவர், தலைஞாயிறு பகுதியில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்வந்து செயல்படக்கூடியவர்.
கஜா புயலால் தலைஞாயிறு பேரழிவை சந்தித்த அந்த இரவில், அந்தந்தப் பகுதி இளைஞர்கள்தான், துடிப்புடன் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்கள். அதில் இனியவனும் ஒருவர்.

போராட்டம் செய்தார்
புயல் அடித்து பல நாட்களாகியும் உணவின்றி, நீரின்றி, வசிப்பிடமின்றி மக்கள் பரிதவித்து நின்ற வேளையில், நிவாரணம் வழங்காத தமிழக அ.தி.மு.க. அரசை கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி, தலைஞாயிறு பகுதியிலும் நடந்தது. அதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றதைப் போலவே இனியவனும் பங்கேற்றார்.

போலீஸ் நடவடிக்கை
ஆனால், அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் விரட்டிய பிறகு, நிவாரணம் கேட்டு போராடிய மக்கள் போராட்டங்களில் குதித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்ததால் மேலும் பரபரப்பு கூடியது. கைதானவர்களை திருச்சி உள்ளிட்ட நெடுந்தொலைவு சிறைகளில் அடைப்பது, என இன்றுவரை போலீஸ் நடவடிக்கைகள் தொடர்கிறது.

தேடல்
நேற்று கூட தலைஞாயிறு அருகே உள்ள லிங்கத்தடி என்ற ஊரில் ஓர் இளைஞரை கைது செய்துள்ளனர். இதில் இளைஞர் இனியவனின் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. போலீஸ் அவரை தீவிரமாக தேடி வருகிறது. இதனால் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாகவே சுற்றி வருகிறார்.
பரபரப்பு வீடியோ
இந்நிலையில்தான், நேற்று இரவு 8 மணி அளவில் தனது முகநூல் பக்கத்தில் இனியவன் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தன்னையும், தன் குடும்பத்தையும், தங்களைப் போன்ற பலரையும் இந்த தமிழக அரசும், காவல்துறையும் தீவிரவாதிகளைப் போல தேடி வருவதாகவும், இந்த வேதனை தாங்காமல் தான் விஷம் குடித்துவிட்டதாகவும் கூறுகிறார்.

உடல்நிலை
கண்ணீர் மல்க பேசும் அவர், தன் மரணத்தின் மூலமாகவேனும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்.இனியவன் எந்த ஊரில் தலைமறைவாக இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், அவரது தற்போதைய உடல்நிலை என்ன என்பது குறித்து உடனடி விவரங்கள் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications